கனடாவில் சீக்கிய இளம்பெண் சுட்டு கொலை
06 Dec,2022
கனடாவில் ஒன்டாரியோ மாகாணத்தில் சீக்கிய இளம்பெண் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார். ஒன்டாரியோ, கனடாவில் ஒன்டாரியோ மாகாணத்தில் மிஸ்சிசாவ்கா நகரில் பவன்பிரீத் கவுர் என்ற 21 வயது சீக்கிய இளம்பெண் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார்.
இந்த சம்பவத்தில் கவுர் பலத்த காயமடைந்து உள்ளார். இதுபற்ற தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு போலீசார் சென்றுள்ளனர். பிராம்ப்டன் பகுதியை சேர்ந்த அவரை படுகாயங்களுடன் கண்ட போலீசார், உயிர் காக்கும் சிகிச்சைகளை அளித்து உள்ளனர். எனினும், அதில் பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார். திட்டமிட்ட படுகொலை என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதுபற்றி போலீஸ் உயரதிகாரி டிம் நக்தேகால் கூறும்போது, சம்பவ பகுதியில் இருந்து முழுவதும் கருப்பு உடையுடன் ஒருவர் தப்பி சென்றார். அதனால், அவர் ஆணா, பெண்ணா என தெரியவில்லை என கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய வம்சாவளியான 18 வயது கொண்ட மேஹக்பிரீத் சேத்தி என்பவரை உயர்நிலை பள்ளி ஒன்றில் வாகன நிறுத்துமிடத்தில் வைத்து மற்றொரு டீன்-ஏஜ் நபர் குத்தி படுகொலை செய்த நிலையில், இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.