நான் ஒரு பேய், குழந்தைகளை கொன்றது நான்தான்' - 7 பச்சிளம் குழந்தைகளை கொன்ற செவிலியர்!
14 Oct,2022
குழந்தைகளை கொன்ற நர்ஸ்குழந்தைகளை கொன்ற நர்ஸ்
32 வயது பெண் செவிலியர் பிறந்து ஒரே நாள் ஆன குழந்தை உள்பட 7 பச்சிளம் குழந்தைகளை மருத்துவமனையில் வைத்தே கொடூரமாக கொலை செய்துள்ளார்.
பிரிட்டன் நாட்டில் பெண் செவிலியர் ஒருவர் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த 7 குழந்தைகளை கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த கொலையை நான் தான் செய்தேன் என அவர் கைப்பட எழுதிய வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளது.
பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த 32 வயது பெண் செவிலியர் லூசி லெட்பி. இவர் அந்நாட்டின் செஸ்டர் பகுதியில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். செவிலியர் லூசி 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை தனது மருத்துவமனையில் 7 குழந்தைகளை கொலை செய்துள்ளார். மேலும் 15 குழந்தைகளை கொலை செய்ய முயற்சித்துள்ளார். 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் இது போன்ற கொலை முயற்சியில் ஈடுபடும்போது தான் சந்தேகத்தின் பேரில் சக மருத்துவர்களின் தகலவின் பேரில் காவல்துறை லூசியை கைது செய்துள்ளது.
கைக்குழந்தைகள் உடலில் இன்சுலின் ஊசி போட்டு நஞ்சை ஏற்படுத்துவது, குழந்தைகளின் உடலில் சிரஞ்ச் மூலம் காற்றை ஏற்றி ரத்தநாளங்களில் பாதிப்பை ஏற்படுத்துவது போன்ற வழிகளில் உறைய வைக்கும் முறையில் கொலைகளை லூசி செய்துள்ளார். உயிரிழந்த குழந்தைகளில் பெரும்பாலானவை இரட்டை குழந்தைகள் மற்றும் பேறு காலத்திற்கு முன்பாகவே பிறந்த குழந்தைகள் ஆகும். மிகவும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக பிறந்து ஒரே நாள் ஆன குழந்தையை கூட லூசி கொலை செய்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணையில் லூசி தான் கைப்பட எழுதிய ஒப்புதல் வாக்குமூலம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் லூசி, "நான் ஒரு பேய். நான்தான் அவர்களை கொலை செய்தேன். நான் வாழத் தகுதி அற்றவள். என்னால் அவர்களை முறையாக பார்த்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் நான் அவர்களை கொன்றேன். நான் மிகவும் மோசமான நபர்" என்ற குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார்.
அதேநேரம், தற்போது நீதிமன்ற விசாரணையின்போது தான் ஏதும் குற்றம் செய்யவில்லை என லூசி வாதத்தை முன்வைத்துள்ளார். இந்த வழக்கு பிரிட்டன் நாட்டின் மிகவும் பரபரப்பான வழக்காக நடைபெற்று வருகிறது. ஏழு கைக்குழந்தைகளை மருத்துவமனையில் வைத்து பெண் செவிலியரே கொன்ற இச்சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.