சென்னை: சென்னையில் வட மாநில காதலர்கள் தற்கொலை விவகாரத்தில், பாலியல் உறவுக்கு அழைத்து மிரட்டிய பிரபல ஓட்டல் ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும், தப்பி சென்ற அசாம் நபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு லாட்ஜில் கடந்த 7ம் தேதி அறை எண் 102ல் இருந்து துர்நாற்றம் வீசுவதாக லாட்ஜ் ஊழியர்கள் திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, திருவல்லிக்கேணி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அறையை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு ஒரு ஆணும் பெண்ணும் இறந்து கிடப்பது தெரிய வந்தது. உடனே வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை செய்ததில் அவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதி வைத்த கடிதத்தை கண்டெடுத்தனர்.
அதில், ‘‘வங்காள மொழியில் எங்களை சேரவிடாமல் தடுத்தவர்கள், இனியாவது சந்தோஷமாக இருக்கட்டும். நாங்கள் விண்ணுலகில் சந்தோஷமாக வாழ்வோம்” என்று எழுதி இருந்தது. பெண்ணின் உடல் அழுகிய நிலையிலும் ஆணின் உடல் அழுகாத நிலையிலும் இருந்ததை மீட்டு உடற்கூராய்வுக்காக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
மேலும், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட நபர்கள் மேற்குவங்க மாநிலம் பங்குரா மாவட்டம் ராதா நகரை சேர்ந்த பிரசஞ்சித் கோஷ் (23), பங்குரா மாவட்டம் பிஷ்ணு பூர் பகுதியைச் சேர்ந்த அர்பிதா பால் (20) என்பது தெரியவந்தது. இவர்களின் தற்கொலைக்கான காரணம் குறித்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், கடந்த 4ம் தேதி மாலை தி.நகரில் உள்ள பிரபல ஓட்டலில் பணியாற்றி வந்த இளம்பெண் ஒருவர் காணாமல் போனதாக ஓட்டல் ஊழியர்கள் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த தகவல் திருவல்லிக்கேணி போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த திருவல்லிக்கேணி போலீசார் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் தகவல்களை பெற்று ஓட்டலுக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், தற்கொலை செய்து கொண்ட இருவரும் ஓட்டலில் ஊழியர்களாக பணிபுரிந்து வந்தவர்கள் என்பது தெரிய வந்தது. குறிப்பாக, அர்பிதா பால் பிஆர்ஓ.,வாகவும், பிரசஞ்சித் சர்வராகவும் அந்த ஓட்டலில் பணிபுரிந்து வந்துள்ளனர். இருவரும் காதலித்துள்ளனர். இந்நிலையில் இருவரின் காதலுக்கு சம்மதம் வாங்குவதற்காக 2 மாதத்திற்கு முன்பாக தனது சொந்த ஊரான மேற்குவங்கத்திற்கு சென்று கடந்த 3ம் தேதி மாலை ரயில் மூலமாக பிரசஞ்சித் சென்னை வந்துள்ளார். அவரை அழைப்பதற்காக அர்பிதா பால் ரயில் நிலையம் சென்றுள்ளார். அதன்பிறகு ஓட்டலுக்கு அவர் வரவில்லை என்பதும் தெரியவந்தது. மேலும், ஓட்டலில் சர்வராக பணிபுரியும் அசாமைச் சேர்ந்த தர்மா என்பவர் காதலர்கள் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட அன்று ஓட்டலில் திடீரென தலைமறைவானது தெரியவந்தது.
இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் தலைமறைவான தர்மாவின் நண்பர்களான ஆந்திராவைச் சேர்ந்த நிதிஷ்குமார் (22), திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜா (32) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரித்தனர். இருவரின் செல்போனையும் பறிமுதல் செய்து சோதனை செய்தபோது, அதில் தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் புகைப்படங்கள் இருந்தது. போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தற்கொலை செய்துகொண்ட அர்பிதா பாலை மிரட்டி நிதிஷ் குமார், ராஜா, தர்மா ஆகிய மூவரும் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில், திருமணம் செய்துகொள்ள பெற்றோரிடம் அனுமதி வாங்க, அர்பிதா பாலின் காதலர் பிரசஞ்சித் கோஷ் மேற்குவங்கம் சென்றதை தங்களுக்கு சாதகமாக்கி கொண்ட நிதிஷ்குமார், ராஜா மற்றும் தர்மா ஆகியோர் நள்ளிரவு நேரங்களில் அர்பிதா பால் தங்கியிருக்கும் விடுதிக்கு சென்று அவரை உல்லாசத்துக்கு அழைத்தும், போன் மூலமாக அவரை மிரட்டியும் வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர்கள், பிரசஞ்சித் கோஷுடன் திருமணம் செய்து கொள்ளக்கூடாது எனவும் மிரட்டி வந்துள்ளனர். இதனால் பயம் மற்றும் மன உளைச்சலில் இருந்த அர்பிதா பால் கடந்த 3ம் தேதி மாலை மேற்குவங்கத்தில் இருந்து வந்த அவரது காதலர் பிரசஞ்சித் கோஷுடன் திருவல்லிக்கேணி விடுதியில் கணவன்- மனைவி எனக் கூறி அறை எடுத்து தங்கி உள்ளார்.பின்பு கடிதம் எழுதி வைத்து இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என்பதும் திருவல்லிக்கேணி போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதை தொடர்ந்து, காதலர்களை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து ஓட்டல் ஊழியர்களான நிதிஷ்குமார், ராஜா ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தர்மா என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.