சூரியன்-பூமி இடையிலான தூரம் 66 சதவீதம் அதிகரிப்பா?
17 Aug,2022
இந்த ஆண்டு சூரியனில் இருந்து பூமி மிக தொலைதூர புள்ளியான அபெலியன் நிலையை அடையும் நிகழ்வு ஜூலை 4-ந்தேதி முதல் ஆகஸ்டு 22-ந்தேதி வரை நடைபெறும் என்றும், சூரியனில் இருந்து பூமி தனது உச்சப்பட்ச தூரத்தை அடைவதால் இதுவரை இல்லாத அளவிற்கு குளிர் அதிகரிக்கும் என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் 9 கோடி கிமீ என்றும், ஆனால் அபெலியன் நிகழ்வின் போது தூரம் 66% அதிகரித்து 15.20 கோடி கிமீ ஆக அதிகரிக்கப்போகிறது என்றும் அந்த தகவலில் கூறப்பட்டது. இதன் அடிப்படையில் செய்திகளும் வெளிவந்தன.
சூரியனில் இருந்து பூமி விலகிச் செல்வது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கடும் குளிர் நிலவும் என எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் செய்தி பரவியது. இந்த தகவல் குறித்த உண்மைத் தன்மையை சரிபார்த்ததில், சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் மற்றும் அதிகரிக்கும் தூரம் குறித்து, வெளியான தகவல் தவறானது என தெரியவந்தது. 9 கோடி மைல்கள் என்பது 9 கோடி கிமீ என கவனக்குறைவாக செய்தி பகிரப்பட்டுள்ளது. மேலும் குளிர் எச்சரிக்கை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாக வெளியான தகவல் உண்மையல்ல என்று பத்திரிகை தகவல் மையம் உறுதிப்படுத்தி உள்ளது.