ஆட்டோவில் பள்ளி மாணவியை கடத்த முயற்சிஸ குதித்து தப்பிய சம்பவம்
09 Aug,2022
வடசென்னையைச் சேர்ந்த மாணவி தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் மாணவி வீட்டில் இருந்து ஷேர் ஆட்டோவில் பள்ளிக்கு பயணிப்பது வழக்கம். இந்த நிலையில் இன்றும் மாணவி பள்ளி செல்ல ஷேர் ஆட்டோவில் ஏறியுள்ளார். அந்த ஆட்டோவில் ஏற்கனவே இரண்டு வாலிபர்கள் டோல்கேட்டில் இருந்து பயணித்துள்ளனர்.
இந்த நிலையில், ஷேர் ஆட்டோ புதுவண்ணாரப்பேட்டை அருகே வந்தபோது ஆட்டோவில் இருந்த வாலிபர்கள் மாணவியின் வாயில் கைக்குட்டையை திணித்து கடத்த முயன்றுள்ளனர். உடனே மாணவி தப்பிக்க முயற்சித்து ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்துள்ளார். இதனால் மாணவியின் மூக்கு உடைந்து காயம் ஏற்பட்டுள்ளது.
உடனே ஆட்டோ டிரைவர் சார்லஸ் வண்டியை நிறுத்தவே இரு இளைஞர்களும் ஓட்டம் பிடித்துள்ளனர். சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் மாணவியை ஆசுவாசப்படுத்தி அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் மாணவியிடமும், ஆட்டோ டிரைவர் சார்லஸிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் பட்டப்பகலில் பள்ளி மாணவியை ஆட்டோவில் வைத்து கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது