நான்சி பெலோசிக்கு தடை விதித்த சீனா..
06 Aug,2022
சீனாவின் மிரட்டல்களுக்கு இடையே கடந்த 2-ந் தேதி இரவு தைவான் தலைநகர் தைபேவுக்கு, அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி சென்று, அதிபர் சாய் இங் வென்னை சந்தித்தார். கடந்த 25 ஆண்டுகளில் அமெரிக்காவில் மிக உயரிய பதவியில் இருப்பவர் ஒருவர் தைவானுக்கு செல்வது இதுவே முதல்முறை.
இதனால் ஆத்திரமடைந்துள்ள சீனா தைவானுக்கு எதிராக பல வர்த்தக தடைகளை விதித்தது. மேலும் சபாநாயகர் நான்சி பெலோசிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் குறிப்பிடப்படாத சில தடைகளையும் விதித்துள்ளது. தைவானை சுற்றி மிகப்பெரிய போர் பயிற்சியை தொடங்கியுள்ள சீனா, தைவானின் நடு ஜலசந்திக்கு கடற்படை கப்பல்களையும் போர் விமானங்களையும் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஜப்பான் சென்ற நான்சி பெலோசி, பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை சந்தித்து பேசினார். தைவானை குறி வைத்து சீனா மேற்கொண்டுள்ள போர் பயிற்சி, பிராந்திய பாதுகாப்பிற்கும் அமைதிக்கும் குந்தகம் விளைவிப்பதாக ஜப்பான் பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார். சீனா ஏவுகணைகளை வீசுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கிஷிடா கேட்டுக்கொண்டுள்ளார்.
அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் தைவான் வருவதை சீனா தடுத்து நிறுத்த முடியாது என நான்சி பெலோசி தெரிவித்தார். அமெரிக்கா தைவானுடன் என்றுமே துணை நிற்கும் என்றும் அவர் உறுதியளித்தார். சீனாவின் போர் பயிற்சிக்கு ஜி- 7 நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கு பதிலடியாக சீனாவிற்கான ஜி 7 நாடுகளின் தூதர்களை அழைத்து சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.