தமிழ்நாட்டில் போலி ஆவணங்கள் அடிப்படையில் நூற்றுக்கணக்கில் கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் புலன் விசாரணை செய்து வரும் க்யூ பிரிவு காவல்துறை, விரைவில் தமது இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே. அண்ணாமலை சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் அந்த கடிதத்தை அவர் அனுப்பி வைத்திருந்தார்.
அந்த கடிதத்தை ஆளுநர் ரவியிடம் வியாழக்கிழமை நேரிலும் அண்ணாமலை அளித்திருந்தார். அதில் போலி ஆவணங்கள் அடிப்படையில் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகள் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது போதுமான நடவடிக்கையை காவல்துறை எடுக்கவில்லை என்றும் இந்த வழக்கை மத்திய புலனாய்வுத்துறை மற்றும் தேசிய புலனாய்வு முகமை வசம் ஒப்படைக்குமாறும் அண்ணாமலை கேட்டுக் கொண்டிருந்தார்.
2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மதுரையில் இலங்கை நாட்டைச் சேர்ந்த சில நபர்கள் இந்திய கடவுச்சீட்டுகளை பெற்று வெளிநாடு செல்ல முயற்சிப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அதே ஆண்டு 27ஆம் தேதி மதுரை நகர க்யூ பிரிவு குற்றப்புலனாய்வுத்துறையில் 1967ஆம் ஆண்டு கடவுச்சீட்டு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
புலன் விசாரணை அதிகாரிகள், 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் மதுரையில் இயங்கி வந்த நான்கு பயண முகவர்களின் அலுவலகங்கள் மற்றும் அவர்களுடைய வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். நான்கு பயண முகவர்கள் அன்றைய தினமே கைது செய்யப்பட்டனர். புலன் விசாரணையின்போது 124 கடவுச்சீட்டுகள் கைப்பற்றப்பட்டன. தொடர் புலன் விசாரணையில் 51 நபர்கள் இந்திய கடவுச்சீட்டுகளை பெற்றனர் என்ற விவரமும் தெரிய வந்தது.
மேற்படி 175 கடவுச்சீட்டுகளில் 28 கடவுச்சீட்டுகளை இலங்கை தமிழர்கள் போலி ஆவணங்கள் மூலம் பெற்றுள்ளனர் என இதுவரை தெரிய வந்துள்ளது. அந்த 28 கடவுச்சீட்டுகளில் 7 இலங்கை நபர்கள் மீது மதுரை நகர க்யூ பிரிவிலும் மீதமுள்ள 21 பேர் மீது சென்னை, புதுக்கோட்டை, ஈரோடு, திருப்பத்தூர், சேலம் மற்றும் கோயம்புத்தூர் நகர க்யூ பிரிவுகளில் ஆறு வழக்குள் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் உள்ளது. இது தவிர 30 கடவுச்சீட்டுகள் இந்தியர்களுக்கு உரியதா அல்லது இலங்கை நாட்டினர் பெற்ற கடவுச்சீட்டுகளா என்பது குறித்து புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
மீதமுள்ள 117 கடவுச்சீட்டுகளில் ஒரு இந்தியருக்கான 'போலி கடவுச்சீட்டு' தவிர மற்றைய 16 கடவுச்சீட்டுகளும் இந்தியருக்கு உரியது என்று கண்டறியப்பட்டுள்ளது.
மதுரை நகர க்யூ பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் புலன் விசாரணையில் 475 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டு 340 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த வழக்கில் இதுவரை இந்திய கடவுச்சீட்டு பெற்ற நான்கு இலங்கை தமிழர்கள் மற்றும் 11 பயண முகவர்கள் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இந்திய கடவுச்சீட்டு பெற்ற ஏழு நபர்கள், 13 பயண முகவர்கள், 5 காவல்துறை அலுவலர்கள், 14 மண்டல கடவுச்சீட்டு அலுவலக அதிகாரிகள் மற்றும் 2 தபால் துறை அலவலர்கள் உள்பட மொத்தம் 41 நபர்கள் குற்றம் புரிந்துள்ளதாகவும் குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாகவும் கண்டறியப்பட்டு அவர்கள் மீது புலன் விசாரணை இறுதி செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வழக்கில் காவல்துறை ஆய்வாளர் இளவரசுக்கு இராமநாதபுரம் காவல் சரக துணைத் தலைவர் 2022ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதியிலும் தலைமைக் காவலர் கந்தசாமிக்கு மதுரை மாநகர தெற்கு சரக துணை ஆணையர் 2022ஆம் ஆண்டு மே 20ஆம் தேதியிலும் காவலர்கள் கவியரசு, ஆனந்த் ஆகியோருக்கு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 2022ஆம் ஆண்டு மே 18ஆம் தேதியிலும் குற்ற நடவடிக்கை எடுப்பதற்காக குற்றவியல் விசாரணை முறை சட்டத்தின் 197ஆவது பிரிவின்படி துறையின் முன்அனுமதி வழங்கியுள்ளனர்.
தபால் துறை ஊழியர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிவகங்கை மாவட்ட தபால் துறை கண்காணிப்பாளர் மற்றும் 2022ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதியன்று துறையின் முன்னனுமதி, குற்றவியல் விசாரணை முறை சட்டப்பிரிவு 197இன்படி வழங்கியுள்ளார். மேலும் 1967ஆம் ஆண்டு கடவுச்சீட்டு சட்டப்பிரிவு 15இன்படி 39 எதிரிகள் மீதும் குற்ற நடவடிக்கை மேற்கொள்ள மதுரை மாவட்ட ஆட்சியர் முன்னனுமதி வழங்கியுள்ளார். இதில் அனைத்து காவல் அதிகாரிகளும் அடங்குவர்.
போலி பாஸ்போர்ட்
இந்த வழக்கில் அன்றைய மதுரை மாநகர நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் சிவக்குமார் மீது வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மதுரை மாவட்ட ஆட்சியர் முன்னனுமதியை 2022ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி வழங்கியுள்ளார். 14 கடவுச்சீட்டு அலுவலக அதிகாரிகள் மீதும் குற்றவியல் விசாரணை முறை சட்டத்தின் 197ஆம் பிரிவின்படி நடவடிக்கை எடுப்பதற்கான முன்னனுமதி வேண்டி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு 2021ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியே முன்மொழிவு அனுப்பப்பட்டது. அதன் மீது அந்த அமைச்சகத்தில் இருந்து கேட்கப்பட்ட விளக்கங்களுக்கு 2022ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி விளக்கங்களும் ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இருந்து உரிய முன்னனுமதி இதுவரை பெறப்படவில்லை.
மதுரை க்யூ பிரிவு குற்றவழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு 41 எதிரிகள் மீது நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளவர்களுடன் போலி ஆவண கடவுச்சீட்டு விவகாரத்தில் தொடர்புடையவராக அப்போது மதுரை நகர காவல் ஆணையராக இருந்த தற்போதைய தமிழ்நாடு உளவுப்பிரிவு கூடுதலை தலைமை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாத்ததுக்கு தொடர்பு இருப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருக்கிறார். அது தொடர்பாக செய்திக்குறிப்பில் விளக்கம் ஏதும் தரப்படவில்லை.