இரண்டு வருடமாக வீட்டில் இறந்து கிடந்த பெண் - அப்படியும் வாடகை வசூலித்த அவலம்!
24 Jul,2022
இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் பெக்காம் என்னும் இடத்தில் இருக்கும் குடியிருப்பில் வசித்துவந்த 58 வயதான ஷீலா செலியோன் என்பவர் சுமார் இரண்டு வருடத்திற்கு பின்னர் இறந்த நிலையில் அவரது வீட்டிலிருந்து எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்டார்.
கடந்த பிப்ரவரி மாதம் ஷீலா செலியோனின் உடல் வெறும் எலும்புக்கூடாக அவரது பூட்டிய வீட்டிலிருந்து காவல்துறையால் மீட்கப்பட்டது. அவர் தனியாக வசித்து வந்த நிலையில் உயிரிழந்து இரண்டு வருடம் கழித்துத்தான் இந்த உண்மை வெளியே வந்துள்ளது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
அவர் வசித்துவந்த வீட்டை வீட்டுவசதி சங்கம் நிர்வகித்து வந்துள்ளது. அவரின் ஒரு மாத வாடகை தாமதமான நிலையில் வீட்டுவசதி சங்கம் பெண்ணின் சமூக நலன்கள் பிரிவில் விண்ணப்பித்து அவரின் வாடகையை இரண்டு வருடங்களுக்கு மேலாகப் பெற்றுள்ளனர். இந்த நிலையில் ஜூன் 2020ல் சமையல் எரிவாயு இணைப்பைச் சோதனை செய்யவந்த போது அவர் பதிலளிக்காததால் அவர் வீட்டு எரிவாயு இணைப்பைத் துண்டித்துள்ளனர். ஆனால் ஒருவரும் வீட்டினுள் சென்று பார்க்கவில்லை.
அவரின் இறப்பின் காரணத்தைக் கண்டறியப் பிரேதப் பரிசோதனை செய்யமுடியாத வகையில் உடல் எலும்புக்கூடாக அழுகி விட்டது. அவரின் பற்களைக் கொண்டு அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் இறந்த காலத்தைக் கண்டறிய விசாரணை நடத்தியதில், கடைசியாக ஆகஸ்ட் 2019ல் மருத்துவமனைக்கு தொடர்புகொண்டு சிகிச்சைக்கு முன்பதிவு செய்தது தெரியவந்தது. ஆனால் அடுத்த நாள் அவர் சிகிச்சைக்குச் செல்லவில்லை. மேலும் அவர் வீட்டின் குளிர்சாதனப் பெட்டியிலிருந்த உணவுப் பொருட்கள், அவரின் மருந்துகள், கடைசியாக அவரே செலுத்திய வாடகை போன்றவற்றை வைத்து அவர் ஆகஸ்ட் 2019 இல் இறந்துள்ளார் என்று உறுதிப்படுத்தப்பட்டது.
முக்கியமாக ஷீலா செலியோன் வெளியே வராததால் சந்தேகப்பட்டு இருமுறை புகாரளித்து காவலர்கள் வந்து விசாரித்தும் அவரின் இறப்பை கண்டுபிடிக்கவில்லை. இரண்டாம் முறை காவல்துறையினர் விசாரிக்க வந்தபோது அவர் நலமாக உள்ளார் என்று தவறுதலாகக் கிடைத்த தகவலில் அப்படியே விட்டுவிட்டனர்.
ஒருவர் இறந்து இரண்டு வருடத்திற்கு மேலாகிக் கண்டுபிடித்திருப்பது என்பதை ஏற்றுக்கொள்வதற்குக் கடினமாக உள்ளது என்று விசாரணையில் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளார், மேலும் வாடகைக்கு வசிப்பவர் இறந்தது கூட தெரியாத நிலையிலிருந்த வீட்டுவசதி சங்கம் மேல் தனிப்பட்ட விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்காக வீட்டுவசதி சங்கம் மன்னிப்பு கோரியுள்ளது.