மோசடி புகாருக்கு ஆளான குரு ரியால்ட்டி அசோசியேட்ஸ் நிறுவனத்தை சேர்ந்தவர்கள்.. மோசடி புகாருக்கு ஆளான குரு ரியால்ட்டி அசோசியேட்ஸ் நிறுவனத்தை சேர்ந்தவர்கள்..
Chennai | பலவிதமான பண மோசடிகள் நடைபெற்று வரும் சூழலில் லீசுக்கு வீடு தேடுபவர்களையும், வாடகைக்கு வீட்டை கொடுக்கும் உரிமையாளர்களையும் குறிவைத்து குரு ரியால்ட்டி அசோசியேட்ஸ் என்ற நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுள்ளது.
வீட்டை வாடகைக்கு எடுத்து அந்த வீட்டை லட்சக்கணக்கில் லீசுக்கு விட்ட சம்பவத்தில் சுமார் 20 கோடிக்கு மேல் பண மோசடி செய்த கும்பல் தலைமறைவாகியிருப்பதாக பாதிக்கப்பட்ட 154 பேர் பள்ளிகரணை காவல் துணை ஆணையாளரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.
சென்னையை அடுத்த பல்லாவரம்- துரைப்பாக்கம் ரேடியல் சாலை கோவிலம்பாக்கம், பூபதிநகர், சின்டிகேட் பேங்க் காலனி சாலையில் சோலை முத்துராஜா என்பவர் குரு ரியால்ட்டி அசோசியேட்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் புதிதாக கட்டப்படும் வீடுகளை குறிவைத்து மாதந்தோறும் வீட்டிற்கு வாடகை தருவதாக கூறி வீட்டின் உரிமையாளர்களிடம் ஒரு ஒப்பத்தம் போட்டுள்ளனர்.
அதன் பிறகு அந்த வீட்டை வீடு தேடும் நபர்களுக்கு லீசுக்கு விடுவதாக OLX ஆன்லைன் நிறுவத்தின் மூலம் விளம்பரம் செய்துள்ளனர். இந்த விளம்பரத்தை பார்த்த வீடுகளை தேடி அலைந்த நூற்றுக்கணக்கானோர் ரூபாய் 4 லட்சம் முதல் 30 லட்சம் வரை கொடுத்து ஒப்பந்தம் போட்டு வீடுகளை லீசுக்கு பெற்றுள்ளனர். இப்படி வீடுகளை லீசுக்கு எடுப்பவர்கள் அந்த வீட்டின் உரிமையாளருக்கு தெரிந்தபடியே ஒப்பந்தம் செய்துள்ளனர். அதேபோல் வீட்டின் உரிமையாளர்களும் குரு ரியால்ட்டி அசோசியேட்ஸ் நிறுவனத்திடம் மாத வாடகைக்கு வீட்டை கொடுப்பதாகவும் அதை அவர்கள் மற்றவர்களுக்கு லீசுக்கு விடுவதையும் அறிந்தே ஒப்பந்தம் போட்டுள்ளனர்.
இப்படியான சூழலில் கடந்த சில மாதங்களாக வீட்டின் உரிமையாளர்களுக்கு வாடகை தரவில்லை என்பதால் உரிமையாளர்கள் அவர்களுக்கு சொந்தமான வீட்டில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேருங்கள் என்று கூறியுள்ளனர். அதற்கு வீட்டில் வசிப்பவர்கள் நாங்கள் லட்சக்கணக்கில் முன் பணம் செலுத்தி வீட்டை லீசுக்கு எடுத்துள்ளது தங்களுக்கு தெரிந்ததுதானே திடீரென வெளியேற சொன்னால் நாங்கள் எங்கு செல்வோம் நாங்க லீசுக்கு கொடுத்த முன் பணம் வரும் வரை நாங்கள் இங்குதான் இருப்போம் என கூறியுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் நாளடைவில் வாக்குவாதங்கள் முற்றி வரும் நிலையில் ஒரு கட்டத்தில் இருவரும் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்துள்ளனர்.
குரு ரியால்ட்டி அசோசியேட்ஸ்
ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து வீட்டை வாடகைக்கு எடுப்பதுபோல் உரிமையாளரிடம் ஒப்பந்தம் போட்ட சோலை முத்துராஜா மறுபக்கம் காலியாக வீடு உள்ளது என்று விளம்பரம் செய்து வீடு தேடி அலைபவர்களை குறிவைத்து பல லட்சம் பெற்றுக்கொண்டு வீட்டை லீசுக்கு விடுவதாக அவர்களிடமும் ஒரு ஒப்பந்தம் போட்டு இருதரப்பினரையும் மோசடி செய்துவிட்டு ஊழியர்களோடு உரிமையாளர் சோலை முத்துராஜாவும் தலைமறைவாகியுள்ளனர்.
154 பேர் குழுவாக புகார்
தாங்கள் ஏமாற்றப்பட்டதை தொடர்ந்து தங்களுடைய பணத்தை பெற்றுத்தரக்கோரி சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள பள்ளிகரணை துணை ஆணையர் அலுவலகத்தில் ஏமாற்றப்பட்ட 154 பேர் குழுவாக புகார் அளித்தனர்.
154 நபர்களை நம்பவைத்து திட்டம் தீட்டி பணம் மோசடி செய்த குரு ரியால்ட்டி அசோசியேட்ஸ் உரிமையாளர் சோலை முத்துராஜா, இவரின் உதவியாளர் அமலி மற்றும் ரமேஷ், சந்தோஷ், கிருஷ்ணா, சிவா, மஞ்சு, சரவணன், ரேனுகா, மகாலட்சுமி ஆகியோர் தலைமறைவவாகி இருப்பதாகவும், சோலை முத்துராஜா சுமார் 20கோடிக்கு மேல் பண மோசடி செய்துள்ளதாகவும், இன்னும் பலர் சோலைமுத்துராஜாவிடம் ஏமாற்றப்பட்டிருப்பார்கள் அவர்கள் புகார் கொடுக்கும் பட்சத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மற்றும் மோசடி செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு அதிகரிக்கலாம் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
₹ 20 கோடியுடன் தலைமறைவு:
சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், துரைப்பாக்கம், திருவான்மியூர், செம்மஞ்சேரி, வேளச்சேரி, பல்லாவரம், பள்ளிகரணை, வெட்டுவாங்கேனி, அடையார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 150க்கும் மேற்பட்ட வீடுகளை குரு ரியால்ட்டி அசோசியேட்ஸ் நிறுவனம் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு வீட்டை லீசுக்கு விட்டு அதில் கிடைத்த சுமார் 20 கோடிக்கும் மேல் பணத்துடன் தலைமறைவாகி இருப்பது தெரியவந்துள்ளது.
154 பேரை பணமோசடி செய்ததாக கூறப்படும் சோலை முத்துராஜா உள்ளிட்டோர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களின் செல்போன் எண் ஸ்சுவிட்ச் ஆப்பில் இருப்பதால் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர்களுள் ஒருவரான அருள்..
சோழிங்கநல்லூர் பகுதியில் வீட்டை ரூபாய் 7.5 லட்சத்திற்கு லீசுக்கு எடுத்த அருள் என்ற பெண்மணி வசிக்கும் வீட்டை திடீரென வங்கியிலிருந்து வந்தவர்கள் சர்வே செய்ய தொடங்கியுள்ளனர். எதற்காக வீட்டை அளவு செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு இந்த வீட்டின் உரிமையாளர் வங்கியில் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்துவிட்டு பணம் பெற்றுள்ளார். பெற்ற பணத்தை திருப்பி கட்டாததால் வங்கி வீட்டை மீட்கும் பணியில் ஈடுபட்டது அருள் குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வீட்டை லீசுக்கு எடுக்கும்போதே ஏதேனும் வங்கியில் கடன் உள்ளதா என்று அருள் குரு ரியால்ட்டி நிறுவனத்திடம் கேட்டதற்கு அப்படியெல்லாம் இல்லை என்று கூறி ஏமாற்றி பணம் பறித்துள்ளது இப்பதான் தெரியவந்ததாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்தார்.
திருவான்மியூரில் இரண்டு படுக்கை அறை கொண்ட ஒரு வீட்டை லீசுக்கு எடுப்பதற்காக ரூபாய் 18 லட்சம் குரு ரியாலிட்டி அசோசியேட்ஸ் நிறுவனத்திற்கு காதர் என்பவர் கொடுத்துள்ளார் அப்பொழுது ஒரு வீட்டின் சாவியை இவரிடம் கொடுத்துவிட்டு வீட்டை ஒரு பத்து நாட்களில் புதுப்பித்து தருவதாக கூறியுள்ளனர் அதை தொடர்ந்து பத்து நாட்களுக்கு பிறகு சென்று பார்த்த போது காதரிடம் கொடுத்த சாவியின் பூட்டை அகற்றி விட்டு வேறொரு புதிய பூட்டை பொருத்தியுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் குரு ரியாலிட்டி நிறுவனத்திடம் கேட்டபோது வீடு விற்பனைக்கு செய்துள்ளதாகவும் வேறொரு வீட்டை உங்களுக்கு தருவதாகவும் கூறி மீண்டும் ஒரு பத்து நாட்கள் அவகாசம் கேட்டுள்ளனர் அதைத்தொடர்ந்து பத்து நாட்கள் கழித்து கோவிலம்பாக்கத்தில் உள்ள குரு ரியாலிட்டி நிறுவனத்திற்கு சென்று பார்த்தபோது அலுவலகம் பூட்டி இருந்துள்ளது.
காவல் நிலையத்தில் புகார் அளித்த பாதிக்கப்பட்டவர்கள்...
இவரை போல் பலரும் ஏமாற்றப்பட்டு அந்த நிறுவனத்தை தேடி வந்தபோதுதான் தான் ஏமாற்றப்பட்டது தெரிந்ததாக காதர் தெரிவித்தார். வீட்டை லீசுக்கு கொடுக்காமலே ரூபாய் 18 லட்சத்தை ஏமாற்றி மோசடி செய்துள்ளனர் என்று தெரிவித்தார்.
பலவிதமான பண மோசடிகள் நடைபெற்று வரும் இச்சூலில் லீசுக்கு வீடு தேடுபவர்களையும், வாடகைக்கு வீட்டை கொடுக்கும் உரிமையாளர்களையும் குறிவைத்து குரு ரியால்ட்டி அசோசியேட்ஸ் என்ற நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுள்ளது லீசுக்கு வீடு தேடுபவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.