சொத்துக்காக முதியவர் கொலை.. மகளே கூலிப்படையை ஏவியது அம்பலம் -
11 May,2022
தென்காசி மாவட்டம் இலஞ்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோட்டைமாடன் (82) இவர் கடந்த 4ஆம் தேதி தனது சொந்தமான இலஞ்சி செங்கோட்டை செல்லும் சாலையில் உள்ள தோப்பில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து அவரது இரண்டாவது மகள் சந்திரா புகாரின் பேரில் குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் வழக்கு தொடர்பாக கொலை செய்யப்பட்ட கோட்டை மாடனின் மூன்றாவது மகள் ஸ்ரீதேவி காளி செல்வம்(40) மூத்த மகளின் கணவரான பரமசிவன் (57) வசந்தகுமார்(37) இலஞ்சி பகுதியை சேர்ந்த மகேஷ் (24) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய சேகர் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இது குறித்து நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், கொலையான கோட்டைமாடனுக்கு 3 மகள்கள் உள்ளனர். முதியவரான கோட்டை மாடன் தனது இரண்டாவது மகள் சந்திராவுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், இவர்க்கு சொந்தமான 1.82 ஏக்கர் தோப்பை மூன்றில் இரண்டு பகுதியை தனது 2வது மகள் சந்திராவின் மகன் விஜயகுமார் பெயருக்கு எழுதி வைத்துள்ளார். இதற்கு ஸ்ரீதேவி மற்றும் மூத்த மகளின் கணவர் பரமசிவம் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
இதனால் மூன்றாவது மகள் ஸ்ரீதேவி மற்றும் மூத்த மகளின் கணவர் பரமசிவன் ஆகியோர், முதியவர் கோட்டை மாடனை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. மேலும், பரமசிவன் வீட்டில் வேலை பார்க்கும் லோடு ஆட்டோ டிரைவர் சேகர் என்பவரை தொடர்பு கொண்டு கூலிப்படையை வைத்து கொலை செய்துவிடலாம் என திட்டமிட்டு, கல்லிடைகுறிச்சி பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார், மகேஷ், ஆகியோரிடம் ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசியதாகவும் 15 ரூபாய் முன்பணம் கொடுத்து கொலை செய்ய திட்டதாகவும் கூறப்படுகிறது.
முதியவரான கோட்டைமாடனிடம் தோப்பில் உள்ள மரத்தை விலைக்கு வாங்குவதாக பேரம் பேசி நடித்து வசந்தகுமார் மகேஷ் ஆகிய இருவரும் தோப்பிற்கு அவரை வரவழைத்து, கம்புகளால் அடித்து கொலை செய்து தப்பி ஓடிவிட்டனர். மேலும், இது குறித்து போலீசார் தொடர் விசாரணையில் மூன்றாவது மகள் ஸ்ரீதேவியை பிடித்து விசாரணை செய்ததில் கூலி படையை வைத்து கொலை செய்ய திட்டம் மிட்டதாக ஒப்புகொண்டார். இந்நிலையில், கொலையாளிகள் மீதி பணத்தை பெறுவதற்கு இலஞ்சிக்கு வந்த போது போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
சொத்துப் பிரச்சனையில் பெற்ற மகள் மற்றும் மற்றொரு மகளின் கணவர் ஆகியோர் முதியவரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரமசிவத்தின் மனைவி மைதீன்பாத் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.