வேலை வாங்கி தராததால் ஆத்திரம்: தந்தை-மகனை சுட்டுக்கொன்ற போலீஸ்காரர்
07 Apr,2022
உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் விக்ராந்த். இவரிடம் அதேபகுதியை சேர்ந்த புபேந்திரா (வயது 45) என்பவர் வேறு வேலை வாங்கித்தருவதாக கூறி பணம் வாங்கியுள்ளார். ஆனால், கூறியபடி விக்ராந்திற்கு புபேந்திரா வேறு வேலை எதையும் வாங்கிக்கொடுக்கவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த விக்ராந்த் தனது சகோதரனுடன் சேர்ந்து புபேந்திரா மற்றும் அவரது 20 வயது மகன் அர்ஜூனை கடத்திச்சென்று வாங்கிய பணத்தை திருப்பித்தரும்படி சித்தரவதை செய்துள்ளனர்.
மேலும், தொடந்து சித்தரவதை செய்த பின் புபேந்திராவையும் அவர்து மகன் அர்ஜூனையும் கான்ஸ்டபிள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளார். பின்னர் இருவரின் உடலையும் தனது சகோதரனின் உதவியுடன் அருகில் இருந்த காட்டிற்குள் வீசிவிட்டு தப்பியோடிவிட்டார்.
தனது மகன், பேரன் கடத்தப்பட்டது குறித்து புபேந்திராவின் தாய் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டு காட்டிற்குள் வீசப்பட்ட புபேந்திரா மற்றும் அவரது மகன் அர்ஜூனின் உடலை கைப்பற்றினார்.
இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக கான்ஸ்டபிள் விக்ராந்த் மற்றும் அவரின் தாய், தந்தை, மனைவி, சகோதரன், பக்கத்துவீட்டார் உள்பட 6-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள விக்ராந்த் அவரது சகோதரரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.