அமேசான் மழைக்காட்டில் காணாமல் போன இரண்டு சிறுவர்கள் நான்கு வாரங்களுக்கு வெறும் மழைநீரை மட்டுமே குடித்து உயிர் தப்பிய சம்பவம் பலரையும் சிலிர்க்க வைத்துள்ளது. 8 மற்றும் 6 வயதுடைய இரண்டு சகோதரர்கள் பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளில் காணாமல் போன நான்கு வாரங்களுக்குப் பிறகு உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டனர்.
கடந்த பிப்ரவரி 18 அன்று, க்ளீசன் ஃபெரீரா (Gleison Ferreira) மற்றும் அவனது மூத்த சகோதரன் கிளாக்கோ (Glauco) ஆகிய இரண்டு சிறுவர்களும் அமேசானாஸ் மாநிலம், மணிக்கோர் அருகே உள்ள காட்டில் தொலைந்து போனார்கள். இந்த 2 சகோதரர்களும் வீடு திரும்பும் போது, அவர்கள் கண்ணில் தென்பட்ட சிறிய பறவைகளைப் பிடிக்க சென்ற போது காட்டிற்குள் வழியை தவறவிட்டுள்ளனர்.
இருவரும் தொலைந்து போன பிறகு, கிட்டத்தட்ட நான்கு வாரங்கள் உலகின் மிகப்பெரிய மழைக்காடுகளில் வாழ கடுமையாக போராடி உள்ளனர். உள்ளூர் ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, இந்த சகோதரர்கள் காட்டில் சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை என்பதால் வெறும் மழைநீரை மட்டுமே குடித்து உயிர் பிழைத்துள்ளனர்.
பொதுவாகவே, அமேசான் காடுகளில் தேடுதல் பணி மிகவும் கடினமானதாக இருக்கும். போதாக்குறைக்கு அமேசான் காட்டில் இது மழைக்காலம் என்பதால், காணாமல் போன சிறுவர்களை தேடும் பணி மேலும் கடினமானதாக மாறியது. காணாமல் போன சிறுவர்கள் கொடூரமான அமேசான் காட்டையும், மழையையும் சமாளிப்பார்களா என்கிற அச்சமும் மேலோங்கியது. ஆனால் இதே மழை தான் காணாமல் போன சிறுவர்களுக்கு குடிநீர் ஆதாரமாக மாறி, அவர்கள் உயிர்பிழைக்க காரணமாக இருந்தது என்பதை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை!
2 சிறுவர்களையும் பல நாட்கள் தேடியும் எந்த பலனும் கிடைக்கவில்லை. இந்த மீட்புப் பணியில் அவசர சேவைகளும் இணைக்கப்பட்டன. ஆனால் உள்ளூர் ஊடகங்களின் கூற்றுப்படி, வெகு நாட்கள் ஆகியும் சிறுவர்கள் கண்டுபிடிக்கப்படாததால் தேடுதல் பணியானது கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதியோடு நிறுத்திக்கொள்ளப்பட்டுள்ளது. கடைசியாக உள்ளூர் காடுகளில் மரம் வெட்டும் ஒருவர் வழியாகவே காணமல் போன 2 சிறுவர்களும் மீட்கப்பட்டனர்.
அமேசான் காட்டில் தொலைந்து போன இந்த 2 சகோதரர்களும் தாங்கள் வசித்த கிராமத்தில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் வழிமாறி சென்றுள்ளனர். இவர்கள் தங்கள் பெற்றோருடன், பாதுகாக்கப்பட்ட நிலப்பரப்பான லாகோ கபனாவில் உள்ள பால்மீரா கிராமத்தில் வசித்து வந்துள்ளனர். அமேசான் காட்டில் குறிப்பிட்ட நபர் மரம் வெட்டிக் கொண்டிருக்கையில், விறகு வெட்டும் சத்தத்தைக் கேட்டதும், இரண்டு சகோதரர்களில் ஒருவன் உதவிக்காக கத்தி சத்தம் எழுப்பி உள்ளான். அதை மரம் வெட்டுபவர் கவனித்த பட்சத்திலேயே சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். அந்த விறகுவெட்டியின் கூற்றுப்படி, சிறுவர்கள் மிகவும் பலவீனமாகவும், பசியோடும் இருந்தனர் மற்றும் தோலில் சிராய்ப்புகளுடனும் காணப்பட்டனர்.
.
கண்டுபிடிக்கப்பட்ட சிறுவர்கள் முதலில் மணிக்கோரில் உள்ள பிராந்திய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், பின்னர் அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மனாஸில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். தற்போது இந்த 2 சகோதரர்களும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து வருகின்றனர்.
"என் பிள்ளைகளைப் பார்த்தபோது, நான் சிலிர்த்து போனேன்," என்று சிறுவர்களின் தந்தையான கிளாடியோனர் ரிபேரோ ஃபெரீரா கூறியதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இருக்காதா பின்னே? சிறுவர்களை கொல்ல 1000 காரணங்களை கொண்டுள்ள அமேசான் காடு, அவர்களை காப்பாற்ற மழையையும், மரங்களையும் அதை வெட்டுவதற்கு மரவெட்டியையும் உருவாக்கி கொடுத்திருக்கிறது என்றால் - சிலிர்க்காதா பின்னே!