107 ஆண்டுகளுக்கு பின்னர் மூழ்கிய கப்பலை கண்டுபிடித்த ஆய்வாளர்கள்! (video)
11 Mar,2022
1915 ஆம் ஆண்டில் கடலில் மூழ்கி காணாமல் போன அண்டார்டிக் ஆய்வாளர் சர் எர்னஸ்ட் ஷேக்லெட்டனின் என்டூரன்ஸ் கப்பலின் சிதைவுகள் 107 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது கண்டுபிடிக்கப்பட்டது.
1915 ஆம் ஆண்டில் பனிப் பாறைகளுக்குள் சிக்கிய பின்னர் வெட்டல் கடலில் மூழ்கிய இந்த மரக்கப்பல் எங்குள்ளது என்பது ஒரு நூற்றாண்டு காலமாக மர்மமாகவே இருந்தது. இருப்பினும், இப்போது ஒரு பயணக் குழு, பெருமளவில் சேதமடையாத நிலையில் இந்த கப்பலை அப்படியே 3,008 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடித்துள்ளது.
மூழ்கிய அந்த கப்பலின் கேப்டன் ஃபிராங்க் வோர்ஸ்லி முதலில் பதிவு செய்த இடத்தில் இருந்து தோராயமாக நான்கு மைல் தெற்கே இந்த கப்பல் இப்போது கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய இந்த ஆய்வின் இயக்குனர் மென்சன் பவுண்ட், “எண்டூரன்ஸ் கப்பலை கண்டுபிடித்ததில் எங்களின் மகிழ்ச்சியில் நாங்கள் மூழ்கிவிட்டோம்,
அந்த கப்பலின் பிம்பம் அப்படியே இருக்கிறது, இதுவரை நாங்கள் பார்த்த மிகச்சிறந்த மரக்கப்பல் சிதைவு இதுதான். இந்த கப்பல் சிதைவுகள் அடிப்பரப்பில் அற்புதமான பாதுகாப்பில் உள்ளது. இந்த கண்டுபிடிப்பு துருவ வரலாற்றில் ஒரு மைல்கல்ஆகும் ” என தெரிவித்தார்
அண்டார்டிக் ஆய்வாளர் சர் எர்னஸ்ட் ஷேக்லெட்டன் மற்றும் அவரது என்டூரன்ஸ் கப்பல் குழுவினர் அண்டார்டிகாவின் நிலப்பரப்பை அடைய 1915 ஆம் ஆண்டு புறப்பட்டனர்.
ஆனால் கடும் பனிப்பாறைகள் காரணமாக கப்பல் நிலத்தை அடையவில்லை, அக்கப்பல் அடர்த்தியான பனிக்கட்டியில் சிக்கிக்கொண்டது.
எனவே அதில் பயணம் செய்த 28 பேரும் இறுதியில் கப்பலைக் கைவிட்டு தப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்கள் சுமார் 10 மாதங்கள் பனியில் சிக்கிக்கொண்டு, பெரும் போராட்டத்துக்கு பின்னர் படகுகளிலும், இதரப்பொருட்கள் உதவியுடனும், நடந்தும் தப்பி ஊர் திரும்பினார்.
சர் எர்னஸ்ட் ஷேக்லெட்டன் இறந்த 100வது ஆண்டு நினைவு தினத்திற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு, தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் இருந்து இந்த கப்பலை கண்டுபிடிக்கும் பணியில் இறங்கிய எண்டூரன்ஸ் 22 என்ற குழுவால் இந்த சிதைவுகள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.