ரஷியாவை பயங்கரவாத நாடாக அங்கீகரியுங்கள்- உக்ரைன் அதிபர்
09 Mar,2022
உக்ரைன் மீது ரஷியா இன்று 14-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன.
இதனால் உக்ரைன் படைகளுக்கும், ரஷியாவின் படைகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த போரில் ரஷிய தரப்பில் பாதுகாப்பு படையினர், உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் வருகின்றன. இந்த முயற்சிகளின் பலனாக உக்ரைனின் சில பகுதிகளில் தற்காலிகமாக சண்டையை நிறுத்துவதாக ரஷியா அறிவித்துள்ளது.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி காணொளி இணைப்பு மூலம் இங்கிலாந்து பாராளுமன்றத்தின் ஹவுஸ் ஆப் காமன்ஸில் வரலாற்று சிறப்புமிக்க உரையை நிகழ்த்தினார்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனிடம், “மேற்கத்திய நாடுகளின் உதவிக்காக நாங்கள் உங்கள் உதவியை எதிர்பார்க்கிறோம். இந்த உதவிக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம்,உங்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என்று உக்ரைன் அதிபர் கூறினார்.
மேலும் அவர், “தயவு செய்து ரஷியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளின் அழுத்தத்தை அதிகரித்து, அந்த நாட்டை பயங்கரவாத நாடாக அங்கீகரிக்கவும். எங்கள் உக்ரேனிய வானம் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யவும். தயவு செய்து நீங்கள் செய்ய வேண்டியதையும் உங்கள் நாட்டின் மகத்துவத்தால் செய்யுங்கள். உக்ரைனுக்கு மகிமை, இங்கிலாந்துக்கு மகிமை”, என்றார்.
இந்த உணர்ச்சிகரமான உரையில், ஜெலென்ஸ்கி இங்கிலாந்தின் வின்ஸ்டன் சர்ச்சிலின் வார்த்தைகளை நினைவு கூர்ந்தார். மேலும் ரஷிய துருப்புக்களை ஆகாயம், கடல் மற்றும் தெருக்களிலும் எதிர்த்துப் போராடுவதாக உறுதியளித்தார்.