உக்ரைன் ஆக்கிரமிப்பை தடுத்தால் ‘அணு ஆயுதத்தை கையில் எடுப்பேன்’ - புதின் மிரட்டல்
உக்ரைன் மீது இரண்டாவது நாளாக ரஷியா ஏவுகணை வீச்சின் மூலமும், குண்டுவெடிப்பின் வழியாகவும் மூர்க்கத்தமான தாக்குதல்களை நடத்தி உள்ளது. இந்த நிலையில், போருக்கு முன்னதாக ரஷிய அதிபர் புதின் ஆற்றிய ஒரு உரையில் அணு ஆயுத மிரட்டல் விடுத்திருப்பது அம்பலத்துக்கு வந்து பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.
ராணுவ விவகாரங்களை பொறுத்தமட்டில், சோவியத் யூனியன் கலைக்கப்பட்ட பின்னரும், அதன் திறன்களில் கணிசமான பகுதிகளை இழந்தபிறகும், இன்றைய ரஷியா மிகவும் பலம்வாய்ந்த அணுசக்தி நாடுகளில் ஒன்றாக உள்ளது.
மேலும், பல அதிநவீன ஆயுதங்களைக் காட்டிலும் இது ஒரு குறிப்பிட்ட நன்மையைக் கொண்டுள்ளது. இந்த சூழலில், (உக்ரைன் ஆக்கிரமிப்பை தடுக்கம் விதத்தில்) எந்தவொரு நாடும் நேரடியாக நம் நாட்டைத் தாக்கினால் தோல்வியையும், பயங்கரமான விளைவுகளையும் (அணு ஆயுத தாக்குதல்) சந்திக்க நேரிடும்.
உக்ரைனில் தற்போதைய போரின் இறுதியில் ரஷியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே அணுஆயுதப்போர் மூளக்கூடும் என்ற குழப்பமான வாய்ப்பையே புதின் சுட்டிக்காட்டி இருப்பதாக போர் நிபுணர்கள் கருதுகின்றனர்.
உக்ரைனுக்கு எதிரான போரில் அந்த நாட்டுக்கு ஆதரவாகவும், ரஷியாவுக்கு எதிராகவும் அமெரிக்காவோ பிற நேட்டோ நாடுகளோ, தாக்குதல் தொடுத்தால் அவர்களுக்கு பதிலடி கொடுக்க அணு ஆயுதம் இருக்கிறது என்கிற ரீதியில் புதினின் மிரட்டல் அமைந்து இருப்பது அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.
1945-ம் ஆண்டு, இரண்டாம் உலகப்போரை விரைவாக முடிவுக்கு கொண்டு வருகிற உறுதியான வழி இதுதான் என்று, அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் கருதி, ஜப்பான் மீது அணுக்குண்டுகளைப் போட்டார். இந்த கொடிய தாக்குதலில் ஹிரோஷிமாவிலும், நாகசாகியிலும் சுமார் 2 லட்சம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர். அதன்பின்னர் இன்று வரை எந்தவொரு நாடும் அணு ஆயுதங்களை பயன்படுத்தியதில்லை.
ஆனால் இப்போது புதின்தான் முதன்முதலாக அணுக்குண்டை காட்டி மிரட்டி இருக்கிறார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் உக்ரைன் போர் நெருக்கடி உருவான உடனேயே ரஷியாவுக்கும், நேட்டோ நாடுகளுக்கும் இடையே அணு ஆயுதப்போர் ஏற்படும் அபாயம் உண்டு என்பதை உணர்ந்துள்ளார். அவர் தொடக்கத்தில் இருந்தே நேட்டோ, உக்ரைனுக்குள் படைகளை அனுப்பாது என்று கூறி வந்தார். ஏனென்றால் அது அமெரிக்காவுக்கும், ரஷியாவுக்கும் இடையே நேரடி மோதலுக்கு வழிவகுக்கலாம். இது அணு ஆயுத அதிகரிப்புக்கும், மூன்றாம் உலகப்போருக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்து விடக்கூடும் என்பது ஜோ பைடனுக்கும் தெரியும். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் உலகம் பார்த்தாக வேண்டும்.
உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 3-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், கருங்கடல் பகுதியில் உள்ள உக்ரைனின் பாம்பு தீவில் உக்ரைன் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதிக்கு வந்த ரஷிய போர் கப்பல் ஒன்று உக்ரைன் வீரர்களை சரணடையுமாறு கூறியது.
ரஷிய போர் கப்பலின் கேப்டன் தீவில் உள்ள உக்ரைன் வீரர்களிடம் ஆயுதங்களை கைவிட்டு சரணடையுமாறு கூறினார்.
அதில் ரஷிய போர் கப்பல் கேப்டன் கூறுகையில், பாம்பு தீவு, இது ரஷிய போர் கப்பல். உங்கள் (உக்ரைன் வீரர்கள்) ஆயுதகளை கீழே போட்டுவிட்டு சரணடையும்படி நான் கேட்டுக்கொள்கிறேன் அல்லது உங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும். உங்களுக்கு கேட்கிறதா?’ என்றார்.
இதற்கு, அந்த தீவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 13 உக்ரைன் வீரர்களின் தளபதி பதில் அளித்தார். அவர் கூறுகையில், சரி இது தான் முடிவு’ என்றார்.
மேலும், அவர் ரஷிய போர் கப்பல் மற்றும் அதன் படை வீரர்கள், தளபதியை கெட்ட வார்த்தையில் திட்டி சரணடைய மறுத்தார். இதனை தொடர்ந்து தீவில் இருந்த உக்ரைன் பாதுகாப்பு படையினர் மீது ரஷிய போர் கப்பல் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் உக்ரைன் வீரர்கள் 13 பேரும் வீர மரணமடைந்தனர்.