விண்வெளியில் முழுமையாக நிலைநிறுத்தப்பட்ட ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி!
09 Jan,2022
நாசாவால் விண்ணில் ஏவப்பட்ட உலகின் மிகப்பெரிய சக்தி மற்றும் திறன் வாய்ந்த ‘ஜேம்ஸ் வெப்’ விண்வெளி தொலைநோக்கி, பிரெஞ்ச் கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏரியன் 5 ராக்கெட் மூலம் கடந்த டிசம்பர் மாதம் 25ந்தேதி அன்று மாலை 5.50 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்திய மதிப்பில் சுமார் 75 ஆயிரம் கோடி என்ற மிகப்பெரிய பட்ஜெட்டில் பல ஆண்டுகளாக கடினமாக உழைத்து ஆய்வாளர்கள் இந்த தொலைநோக்கியை உருவாக்கியுள்ளனர்.
நிலவில் இருந்து மூன்று மடங்கு தொலைவுக்கு சென்று, சூரியனை சுற்றியவாறு தனது ஆய்வுப்பணியை மேற்கொள்ளும். பிரபஞ்சத்தின் முதல் நட்சத்திரத்தை கண்டுபிடிக்கும் சக்திகொண்ட இந்த தொலைநோக்கி நவீன மனித குலம் முன்பு அறிந்திடாத பல அரிய தகவல்களை அடுத்த சில ஆண்டுகளுக்கு அளிக்க உள்ளது.
இந்த நிலை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை விண்ணில் நிலைநிறுத்தும் பணி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர். கடந்த இரு வாரமாக தொலைநோக்கியின் ஒவ்வொரு பாகமும் படிப்படியாக செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், முக்கிய நிகழ்வாக அதன் கண்ணாடிகள் விரிக்கப்பட்டு, சரியான முறையில் பெருத்தப்பட்டது. இதனை தரைக்கட்டுப்பாட்டில் இருந்து விஞ்ஞானிகள் வெற்றிகரமாக செய்துமுடித்தனர். இந்த தகவலை நாசா தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்தது.
இந்த புதிய தொலைநோக்கி, முன்னதாக, சில ஆண்டுகளுக்கு முன் விண்வெளியில் ஏவப்பட்ட ஹப்பிள் தொலைநோக்கியை விட 100 மடங்குசக்தி மற்றும் திறன் கொண்டதாகும்.
அதனுள் நிரப்பப்பட்டுள்ள எரிபொருள் உபயோகத்தை பொறுத்து இந்த தொலைநோகி அதன் உத்தேசித்த ஆயுட்கால அளவான 10 ஆண்டுகளை கடந்தும் விண்வெளியில் இருந்து ஆய்வு செய்யும் திறன் உள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இது நிலவின் சுற்றுவட்டப் பாதையைக் கடந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பிரபஞ்சத்தை துல்லியமாக படம் பிடிப்பதற்காக அப்சர்விங் பொசிஷன் என்றழைக்கப்படும் கண்காணிக்கும் நிலைக்குச் செல்கிறது. அது பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.