ரூ.53 ஆயிரம் கோடி ஜீவனாம்சம் சாதனை படைக்கும் ரஷ்ய பணக்காரர்
10 Dec,2021
லண்டன்:ரஷ்யாவைச் சேர்ந்த இரண்டாவது மிகப் பெரிய பணக்காரரான விளாடிமிர் பொடானினுடைய மனைவி, 53 ஆயிரம் கோடி ரூபாய் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்துஉள்ளார்.
உலகிலேயே மிகப் பெரிய ஜீவனாம்ச தொகையாக இது இருக்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது.
ரஷ்யாவில், 'நோரில்ஸ்க்' என்ற ஸ்டீல் நிறுவனத்தை நடத்தி வரும் தொழிலதிபர் விளாடிமிர் பொடானின், அவருடைய மனைவி நடாலியா பொடானினா இருவரும் விவகாரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.
கடந்த, 31 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்த இவர்களுக்கு விவாகரத்து வழங்கி ரஷ்ய நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஆனால், நீதிமன்றம் நிர்ணயித்த ஜீவனாம்சம் மிகக் குறைவாக இருந்தது.அதையடுத்து, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் பொடானினா வழக்கு தொடர்ந்துள்ளார்.
விவகாரத்தை வழக்குகளில் அதிக அளவு ஜீவனாம்சத்தை, லண்டன் நீதிமன்றங்கள் அறிவித்து வருகின்றன.நோரில்ஸ்க் நிறுவனத்தில், பொடானினுக்கு உள்ள பங்குகளின் மதிப்பில், 50 சதவீதத்தை கேட்டுள்ளார் பொடானினா. அதன்படி, 53 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டுள்ளார்.
இதைத் தவிர, அவருடைய பெயரில் உள்ள மற்ற சொத்துக்களிலும் பங்கு கேட்டுள்ளார். அதனால், இதைவிடகூடுதல் தொகை அவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. உலகிலேயே மிகப் பெரிய ஜீவனாம்ச தொகையாக இது இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது