குன்னுாரில் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டுள்ள இடம், மிகவும் தாழ்வான பகுதியாக உள்ளது. இவ்வளவு கீழே ஹெலிகாப்டர் பறக்க வாய்ப்பில்லை,'' என, முன்னாள் ராணுவ அதிகாரி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் முன்னாள் கமாண்டன்ட் பிரிகேடியர் சுரேஷ்குமார், 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி:முப்படை தளபதி பிபின் ராவத்தை, 2019ம் ஆண்டு நான் சந்தித்தேன்; எளிமையாக பழகுபவர். அப்போதும், எம்.ஆர்.சி.,க்கு மனைவியுடன் வந்தார்.
தற்போது மீண்டும் அவர்கள் வந்தபோது நடந்த இந்த விபத்து, மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இவர் பயணித்த அதிநவீன 'எம்.ஐ., 17 வி5' ரக ஹெலிகாப்டர் சிறந்த தொழில்நுட்பம் கொண்டது. சியாச்சின் உட்பட இமாலய பகுதிகளில், 20 ஆயிரம் அடி உயரத்துக்கு மேல் பயணித்துள்ளது. வி.ஐ.பி.,க்கள் வரும்போது, ஹெலிகாப்டரில் முழு சோதனை செய்த பிறகே இயக்கப்படுவது வழக்கம்.
தற்போது, விபத்து ஏற்பட்டுள்ள இடம் மிகவும் தாழ்வான இடத்தில் உள்ளது. இவ்வளவு கீழே ஹெலிகாப்டர் பறக்க வாய்ப்பில்லை.இது எதனால் ஏற்பட்டது என்பது விசாரணைக்கு பின் தெரிய வாய்ப்புள்ளது. உடன் வந்துள்ள 'பைலட்' ஹெலிகாப்டர்கள் திரும்பி சென்றுள்ளன. மரங்கள் மீது மோதுவதற்கு முன், ஏதேனும் நடந்துள்ளதா என்பது குறித்து, அதிகாரிகள் நிச்சயம் விசாரணை நடத்துவர். உயர்ரக தொழில்நுட்பத்தில் தயார் செய்துள்ள இந்த ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் குறைவு.
பைலட்டின் கடைசி நேர தகவல், கறுப்பு பெட்டியில் பதிவாகி இருக்கும். இதற்கான தொழில்நுட்ப வல்லுனர்கள், கம்ப்யூட்டரில் இதன் முழு விபரங்களை பதிவு செய்ய, 10 முதல் 20 நாட்கள் வரை ஆகலாம். ராணுவ பயிற்சி கல்லுாரியில் பயிலும் முப்படை அதிகாரிகள் மத்தியில், இங்குள்ள உயர் அதிகாரிகள் மட்டுமின்றி, வெளிநாட்டு அதிகாரிகளும் ஹெலிகாப்டரில் வந்து, தொழில்நுட்ப யுக்திகள் குறித்து பேசி செல்வது வழக்கம்.
குறிப்பிட்ட சில வி.ஐ.பி.,க்கள் வரும்போதும், அச்சுறுத்தல் உள்ள போதும் ரகசியம் காக்கப்படும். இதற்காக, முன்னதாகவே சோதனை ஓட்டம் நடத்தப்படும். இந்த விபத்து மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது. விரைவில் இதன் முழு விபரம் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்