மறைந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் சென்ற நவீன எம்.ஐ.,17 வி5 ஹெலிகாப்டர் விபத்தில் பல விடைத் தெரியாத கேள்விகள் உள்ளன. தொடர்ந்து நடக்கும் விசாரணையில் தான் அவை தீர்க்கப்படும் என தெரிகிறது.
தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 14 பேர் சென்ற எம்.ஐ.,17 வி5 ஹெலிகாப்டர் இன்று (டிச., 08) நண்பகல் குன்னூர், காட்டேரி அருகே தரையிறங்குவதற்கு சில நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில் விபத்திற்குள்ளானது. அதில் 13 பேர் இறந்தனர். வெலிங்க்டன் ராணுவ கல்லூரி பணியாளர் ஒருவர் மட்டும் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதா அல்லது மேகமூட்டம் காரணமாக மரத்தில் மோதி தீப்பிடித்ததா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இச்சம்பவம் குறித்து விமானப் படை முன்னாள் அதிகாரிகள் சிலர் கூறுகையில், நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதி பயணிக்கிறார் என்பதால் ஹெலிகாப்டர் விரிவான சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும். மற்றொரு ஹெலிகாப்டரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும். வானிலை நிலைமை சரிபார்க்கப்பட்ட பின்னரே ஹெலிகாப்டரை எடுத்திருப்பார்கள். மோசமான வானிலை இருந்திருந்தால் பயணத்தை ரத்து செய்ய முயற்சித்திருக்கலாம்?
அப்படி இவை எல்லாமே சாதாரணமாக இருந்திருந்தால், ஹெலிகாப்டர் குன்னூருக்கு அருகில் மேகங்களுக்கிடையே தாழ்வாக பறந்த போது மலை மீது உள்ள உயரமான மரங்களில் மோதியிருக்கலாம். அந்த வான் வழியில் பழக்கப்பட்ட விமானி தான் ஹெலிகாப்டரை இயக்கினாரா என்பது தெரியவில்லை என்கின்றனர்.
பிரதமரின் நம்பிக்கைக்குரிய ஹெலிகாப்டர்!
எம்.ஐ.,17 வி5 வகை ஹெலிகாப்டர் நவீன ரக ராணுவ ஹெலிகாப்டர் ஆகும். உலகின் மேம்பட்ட ஹெலிகாப்டர்களில் இதுவும் ஒன்று. தற்போது விபத்துக்குள்ளானது ZP5164 சீரியல் எண் கொண்டது. பிரதமர் மோடி இதே ரகத்தில் ZP5238 சீரியல் எண் ஹெலிகாப்டர்களை பல்வேறு சந்தர்பங்களில் பயன்படுத்தியுள்ளார். கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் ராமர் கோயிலுக்கான பூமி பூஜை விழாவுக்கு இந்த ரக ஹெலிகாப்டரில் தான் அயோத்திக்கு வருகை தந்தார். அதே போல் இவ்வாண்டு ஏப்ரலில் மேற்கு வங்க தேர்தல் பிரசாரத்தின் போது கங்காராம்பூர், ஜெய்நகர் கூட்டங்களுக்கு இதே ரக ஹெலிகாப்டரில் பயணித்துள்ளார்
உயிருக்கு போராடிய நிலையில் பிபின் ராவத் பேச முயன்றாரா?
குன்னூர்: ஹெலிகாப்டர் விபத்து விபத்து நடந்த இடம், நஞ்சப்பா சத்திரம் என்ற கிராமத்தை ஒட்டி அமைந்துள்ள பட்டா நிலம். இதன் அருகில், நீலகிரி வனக்கோட்டத்தின் காப்பு வனம் உள்ளது. நேற்று மதியம் 12:00 மணியளவில் அந்த கிராமத்தின் மக்கள் தங்களுடைய இயல்பான வேலைகளைச் செய்து கொண்டிருந்தபோது இரண்டு ஹெலிகாப்டர்கள் தொடர்ந்து, வட்டம் அடித்துக் கொண்டிருந்தன.
திடீரென பெரிய வெடிச்சத்தம் கேட்டதும், எல்லோரும் திரும்பிப் பார்த்தபோது, அந்த கிராமத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு மரத்தின் பின்புறத்திலிருந்து மிகப் பெரிய தீப்பிழம்பு புகையுடன் கிளம்பியுள்ளது.அதனால் வெடித்த பின் ஹெலிகாப்டர் மரத்தின் மீது மோதியதா அல்லது மரத்தின் மீது மோதிய பின் ஹெலிகாப்டர் வெடித்ததா என்று யாருக்கும் தெளிவாக தெரியவில்லை.
நாட்டின் முப்படை தலைமை தளபதி தங்களுடைய கிராமத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இறந்திருக்கிறார் என்பதோ, அவர் இந்த தேசத்தில் எவ்வளவு முக்கியமானவர் என்ற விபரமோ தெரியாமல் இந்த விபத்துக்கு பின்னும் மக்கள் தங்களுடைய இயல்பான வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தனர்.
பிபின் ராவத் பேச முயன்றாரா?
மீட்பு பணியில் ஈடுபட்ட முபாரக், சந்திரகுமார் உள்ளிட்ட கிராம மக்கள் சிலர், ஓரிரு நபர்கள் உருக்குலைந்த நிலையிலும் உயிருடன் இருந்ததை பார்த்தாகவும்; அதில் ஒருவர் தங்களுடன் பேச முயன்றதாகவும் தெரிவித்துள்ளனர். விபத்தில் சிக்கியதில் பிபின் ராவத் உடல் மட்டுமே பெரும்பாலும் சிதையாமல் இருந்திருப்பதால், அவர் தான் இறுதி சமயத்தில் உயிருக்கு போராடிய நிலையில் ஏதாவது பேச முயற்சித்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. அவரை யார் என்றே மக்களுக்கு தெரியவில்லை.
மூட்டை கட்டி வந்த உடல்கள்
விபத்து நடந்த இடத்தில் உடல்களை மீட்கும் பணியில் பொதுமக்களுடன் இணைந்து ஈடுபட்ட சமூக சேவகர் முபாரக் கூறியதாவது:தீயணைப்புத்துறையினர் வந்த தகவல் அறிந்து உடனடியாக நாங்கள் வந்துவிட்டோம். அதன் பின்பே, ராணுவம், வனத்துறை அதிகாரிகள் வந்தனர். இரண்டு பேர் கீழே விழுந்து கிடந்தார்கள். முதலில், உள் இருந்தவர்களை மீட்டு வாகனத்தில் அனுப்பினோம். இன்னும் சிலரின் உடல்கள் நெருப்பில் உருக்குலைந்து போயிருந்தன. கீழே விழுந்து சிதைந்ததால், கை, கால் என உறுப்புகளை தனியாக சேகரித்து எடுத்துவந்தோம்.
மொத்தம், 14 பேரில், எட்டு பேர் ஓரளவு இருந்தனர்; மீதமுள்ளவர்களில் யாருடைய உடம்பு, யாருடைய தலை என்று தெரியாத வகையில் சிதைந்து இருந்ததால் மூட்டை கட்டியே கொண்டுவந்தோம். நான் போனபோது, இரண்டு பேர் உயிரோடு இருந்ததாக கூறினர்; ஒருவர் பேசினார். ஆனால், அவரது உடலும் உருக்குலைந்து தான் இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.