நமது முன்னோர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, கலாச்சாரம் போன்ற பல்வேறு தகவல்களை அறிய அவர்கள் வாழ்ந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். அந்த வகையில் உலகளவில் உள்ள வெவ்வேறு வகையான நாகரிகத்தை கொண்ட மக்களின் அடையாளத்தை கண்டறிய எண்ணற்ற அளவிலான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் எகிப்து முதல் கீழடி வரை பல ஆண்டுகளாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மத்தியதரைக் கடல் பகுதியில் உள்ள நாடுகளில் ஒன்றான சைப்ரஸில் 3000 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய தங்க அணிகலன் ஒன்றை அகழ்வாராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து கொண்டிருக்கும்போது கண்டுபிடித்தனர்.
கோதன்பர்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் வெண்கல காலத்தை சேர்ந்த இரண்டு கல்லறைகளை கண்டறிந்தனர். இவை நெஃபெர்டிட்டி அரசின் ஆட்சி காலத்தை சேர்ந்தவை. இதன் பழமையை உணர்ந்து கொண்டு நிச்சயம் அதில் ஏதேனும் முக்கிய பொருட்கள் கிடைக்கும் என்று எண்ணி அகழாய்வு செய்து வந்தனர்.
இந்த இரண்டு கல்லறையும் சைப்ரஸ் நாட்டில் உள்ள ஹாலா சுல்தான் டெக்கே என்ற வெண்கலக் கால நகரத்தில் இருந்து கண்டறியப்பட்டது. மேலும் அங்கு செய்த அகழ்வாராய்ச்சியில் சுமார் 150 எலும்புக்கூடுகள் கிடைத்தன. இவற்றுடன் அந்த மனிதர்கள் அணிந்த மற்றும் அவர்கள் பயன்படுத்திய 500 பொருட்களும் கிடைத்தன. அவற்றில் தங்க அணிகலன்கள், விலை உயர்ந்த கற்கள், செராமிக் போன்றவரை கண்டெடுக்கப்பட்டது.
இவை அனைத்தும் கிமு 1350-இல் பயன்படுத்திய பொருட்கள் என்று கார்பன் டேட்டிங் மூலம் அறியப்பட்டது. பல ஆண்டுகளாக இந்த ஆய்வு குழு இதுபோன்ற அகழ்வாராய்ச்சிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஏராளமான எகிப்திய பொருட்களை இவர்கள் கண்டறிந்துள்ளனர். கோதன்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சைப்ரஸில் கிடைத்த மனித எலும்பு கூடுகளை வைத்து ஆய்வு செய்தனர்.
அப்போது தான் அது எந்த காலத்தை சேர்ந்தது என்று அவர்கள் அறிந்து கொண்டனர். சுமார் 3000 ஆண்டுகளுக்கு மேலாக உப்பு நிறைந்த மண்ணில் இந்த எலும்பு கூடுகள் இருந்து வந்துள்ளதாக குறிப்பிடுகின்றனர். அதே போன்று எலும்பு கூடுகளின் ஒவ்வொரு அடுக்கிலும் அவர்களின் இறுதி சடங்கில் பயன்படுத்திய பொருட்களையும் சேர்த்து புதைத்து வைத்துள்ளனர். மேலும் அந்த குறிப்பிட்ட கல்லறைகளை பல தலைமுறைகளாக அங்கு வாழ்ந்த மக்கள் பயன்படுத்தி வந்திருக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டனர்.
இந்த இடத்தில் அரச குடும்பத்தை சேர்ந்தவர்களின் கல்லறைகளும் உள்ளன என்று அகழ்வாராய்ச்சியின் தலைவரான பேராசிரியர் பீட்டர் பிஷ்ஷர் கூறியுள்ளார். ஒரு குழந்தையின் எலும்பு கூட்டில் தங்க நெக்லெஸ், காதணிகள், தங்க கிரீடம் இருந்துள்ளது. அதை வைத்து பார்க்கும்போது அந்த குழந்தை ராஜ குடும்பத்தை சேர்ந்ததாக இருக்க வேண்டும் என்று பீட்டர் தெரிவித்துள்ளார்.
இந்த கல்லறைகளில் கண்டுபிடித்த எல்லா அணிகலன்களும் தங்கம், வெள்ளி, வெண்கலம், தந்தம் மற்றும் விலை உயர்ந்த கற்களை கொண்டு செய்யப்பட்டதாக உள்ளது. இவை அனைத்தும் சிறப்பான வேலைப்பாடுகளுடன் உள்ளது.
இந்த அகழ்வாய்வில் அரசி நெஃபெர்டிட்டி அணிந்திருந்த ரத்தினக் கற்களான தாமரை மலர் வடிவிலான பென்டென்ட் ஒன்றையும் கண்டுபிடித்தனர். இது போன்ற ஏராளமான பழங்கால பொருட்கள் இந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்டு வருகிறது. இதை அறிந்துகொண்டு அந்த இடத்தில் மேலும் பல ஆய்வுகளை நடத்தவுள்ளதாக குழுவின் தலைவர் பீட்டர் தெரிவித்துள்ளார்.