தென் ஆபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் (Omicron) வைரஸ் இறுதியில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்படுவது கிட்டத்தட்ட தவிர்க்க முடியாதது என்றும் இது ஒரு கவலையளிக்கக்கூடிய விடயம் எனவே அதை கண்டு நாம் அஞ்ச தேவயைில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
கொரோனாவைத் தொடர்ந்து ஒமிக்ரோன் (Omicron) என்கிற புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
முதன் முதலில் தென் ஆபிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது.
குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரோன் (Omicron) வைரஸ் வேகமாக பரவுகிறது. அதுமட்டும் இன்றி ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் ஒமிக்ரோன் (Omicron) பரவிவருகின்றது.
இதன் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் ஒமிக்ரோன் (Omicron) வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி உள்ளிட்ட பல நாடுகள் தெற்கு ஆபிரிக்க நாடுகளுக்கு பயணத்தடையை அறிவித்துள்ளன. இஸ்ரேல் மற்றும் ஜப்பான் ஒருபடி மேலே சென்று ஒட்டுமொத்தமாக அனைத்து நாடுகளுக்கும் பயணத்தடை விதித்துள்ளன.
இந்த நிலையில் ஒமிக்ரோன் வைரஸ் கவலையளிப்பதாக இருந்தாலும், அதை கண்டு அஞ்ச தேவையில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
புதிய வைரஸ் குறித்து வெள்ளை மாளிகையில் இருந்தபடி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,
தென் ஆபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் (Omicron)வைரஸ் இறுதியில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்படுவது கிட்டத்தட்ட தவிர்க்க முடியாதது. இது ஒரு கவலையளிக்கக்கூடிய விடயம் என்றபோதிலும், அதை கண்டு நாம் அஞ்ச தேவையில்லை.
ஏனெனில் இந்த புதிய மாறுப்பாட்டை எதிர்த்து போராட நாம் தயாராக உள்ளோம். இந்த போரில் முன்பு இருந்ததை விட தற்போது நம்மிடம் அதிக கருவிகள் உள்ளன.
எனவே ஒமிக்ரோன் வைரஸ் காரணமாக ஊரடங்கை நடைமுறைப்படுத்தவோ, பயணக்கட்டுப்பாடுகளை நீட்டிக்கவோ அவசியமில்லை. மக்கள் முழுமையாக தடுப்பூசி போட்டு, முக கவசம் அணிந்தால் போதுமானது.
நம்மிடம் தற்போதுள்ள தடுப்பூசிகள் புதிய வைரசுக்கு எதிராக செயல்படும் என சுகாதார நிபுணர்கள் என்னிடம் தெரிவித்தனர். அதேபோல் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்வது பாதுகாப்பை அதிகரிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.