பல்வேறு கலாச்சாரங்களில், உலகம் முழுவதும் ஆண்கள் தான் அதிகாரம் செலுத்தி வந்தார்கள், சொத்தின் மீதான உரிமை ஆண்களுக்குத் தான் உள்ளது, என்று உலகம் முழுவதிலும் ஆண்களின் கை மேலோங்கி இருக்கிறது. அதே போல, உலகம் எவ்வளவு முன்னேறினாலும், ஆண் பெண் இடையே பாரபட்சம் காட்டக் கூடிய சமூகங்களில் பெண்கள் இன்னும் வீட்டு வேலை மட்டும் செய்து கொண்டு நான்கு சுவர்களுக்குள்ளே இருக்கிறார்கள் என்ற நிலையும் தொடர்ந்து இருந்து வருகிறது.
ஆனால் முழுக்க முழுக்க பெண்களாலேயே ஆளப்படும், பெண்கள் அதிகமாக இருக்கும் ஒரு தீவு ஐரோப்பாவில் இருக்கிறது. எஸ்டோனியாவில் உள்ள கீஹ்னு என்ற தீவு பெண்களால் ஆனது, பெண்களால் ஆளப்படுகிறது. எஸ்டோனியாவில் கிட்டத்தட்ட 2,000 தீவுகள் உள்ளன, அதில் மிகப்பெரிய தீவு தான் கீஹ்னு தீவு.
தீவுகள் என்றாலே, அழகான கடற்கரை, பார்க்கும் இடமெல்லாம் பச்சை போர்த்தியது போல காடுகள், பண்ணை வீடுகள் ஆகியவை கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும். அதே மாதிரியான, கண்களுக்கு விருந்தளிக்கும் ஒரு தீவுதான் கீஹ்னு தீவு. ஆனால், அழகான தீவு என்பதைத் தாண்டி, இந்தத் தீவு பெண்கள் அதிகமாக வாழ்ந்து வரும் தீவு என்று மிகவும் பிரபலமாகி உள்ளது. பெண்கள் வசிப்பது மட்டுமல்ல, பெண்கள் பாரம்பரியமாக கடைப்பிடித்து வரும் பழக்க வழக்கங்களும் காரணம் என்று கூறப்படுகிறது.
ஆரம்ப காலங்களில், இந்த தீவில் ஆண்கள் அன்றாட வேலைகளில் ஈடுபடவில்லை. அவர்களின் வேலை மீன் பிடிப்பது தான். மீன் பிடிப்பதற்காக வெகு தொலைவு செல்லும் பழக்கத்தை மேற்கொண்டிருந்தனர். எனவே, தொலைதூரம் பயணிக்கும் மீனவர்களைப் போலவே, இந்த தீவின் ஆண்கள் வீட்டில் இருந்து பல மாதங்கள் விலகி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் தீவில் செய்ய வேண்டிய அனைத்து முக்கியமான வேலைகளையும், பொறுப்புகளையும் பெண்களே எடுத்துக்கொண்டு நடத்தி வந்தனர்.
ஆண்கள் தீவை விட்டு வெகுதூரம் சென்றதால், காலப்போக்கில் இந்த தீவில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தது. திருமணங்களை கூட பெண்கள் தான் பொறுப்பேற்று நடத்துகிறார்கள், அதேபோல இறப்பு சடங்குகளிலும் பெண்கள்தான் பொறுப்பில் இருக்கிறார்கள். கீஹ்னு தீவில் ஆட்டம், பாட்டம், இசை, நடனம், கொண்டாட்டம், பண்டிகைகள், கைவினைப் பொருட்கள் எல்லாமே இவர்களின் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக வருகிறது.
தற்போதைய நவீன தாக்கத்தில் இருந்து கீஹ்னு ஓரளவுக்கு விலகி இருந்தாலும், மாற்றங்களால் கொஞ்சம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. மீன் பிடிக்கும் தொழில் மட்டுமே பிரதானமாக இருந்த காலம் மாறி, தற்போது இளைய தலைமுறையினர் அருகில் இருக்கும் நகரங்களுக்கு வேலைக்கு செல்கின்றனர். அதுமட்டுமின்றி, நவீனமான வேட்டையாடும் கருவிகள், எந்திரங்கள் மற்றும் கப்பல்களை நவீனப்படுத்துதல் ஆகிய வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
நவீன காலத்திற்கு ஏற்றவாறு மாற்றங்களை அவர்களால் சரியாக எதிர்கொள்ள முடியாமல் இருக்கும் கீஹ்னு தீவு பெண்கள், தங்களுடைய கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களை இன்றுவரை மாறாமல் கடைபிடித்து வருகிறார்கள். ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு அவர்களின் பழக்க வழக்கங்கள் அத்தனையும் வெற்றிகரமாக பெண்களால் பகிரப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (UNESCO), மனிதர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் பட்டியலில் இந்த தீவும் இடம் பெற்றுள்ளது. இதுவே இந்த அதிசயத் தீவின் அடையாளமாக நிலைத்திருக்கிறது.