விபத்தில் நினைவை இழந்த இந்த நபருக்கு 6 மணி நேரங்கள் மட்டுமே தன் வாழ்க்கையில் நடந்தது நினைவில் இருக்கிறது. இவர் தனது மனைவி, மகனை கூட மறந்துவிடுகிறார்.
நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த கஜினி படத்தில் வருவது போல, தன் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் அனைத்துமே குறுகிய காலகட்டத்தில் மறந்துவிடும் மனிதர் குறித்த டாகுமெண்ட்ரி படம் ஒன்று வெளிவந்துள்ளது. விபத்தில் நினைவை இழந்த இந்த நபருக்கு 6 மணி நேரங்கள் மட்டுமே தன் வாழ்க்கையில் நடந்தது நினைவில் இருக்கிறது. இவர் தனது மனைவி, மகனை கூட மறந்துவிடுகிறார். அவரின் வாழ்க்கை எப்படிப்பட்ட சூழலில் நகர்கிறது, என்ன சவால்களையெல்லாம் சந்திக்கிறார். இந்த ஞாபகமறதியால் அவர் வாழ்க்கையில் இழந்தது குறித்து அந்த டாகுமெண்ட்ரியில் விரிவாக காட்டப்பட்டுள்ளது.
நிஜத்தில் நடப்பவை படமாக தயாரிக்கப்படுவது போல படங்களில் வருவதும் நிஜமாகின்றன. அந்த வகையில் டேனியல் ஷ்மிடை ‘கஜினி’ சூர்யா என்று சிம்பிளாக சொல்லலாம். கஜினி படத்தில் சூர்யாவுக்கு 15 நிமிடங்களில் எல்லாமே மறந்துவிடும், டேனியலுக்கோ 6 மணி நேரத்தில் எல்லாமே மறந்துவிடும். இதை கேட்பதற்கு மிகவும் ஈஸியாக தோன்றலாம், ஆனால் 6 மணி நேரம் மட்டுமே நினைவுத்திறன் கொண்ட ஒரு நபரின் வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை தெரிந்துகொண்டால் கண்ணீரை வரவழைப்பதாக இருக்கும்.
டேனியல் 6 ஆண்டுகளுக்கு முன் தனது சகோதரியை பார்ப்பதற்காக காரில் புறப்பட்டு சென்ற போது, வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. டேனியலின் கார் கடைசியாக அந்த நெரிசலில் சிக்கியபோது, அவருக்கு பின்னால் போக்குவரத்து நெரிசல் இருப்பதை கவனிக்காமல் வேகமாக வந்த கார் ஒன்று டேனியலின் காரில் பலமாக மோதியது. இந்த விபத்தில் தான் டேனியலுக்கு நினைவாற்றல் 6 மணி நேரமாக சுருங்கியது. இந்த தகவல்களை கூட அவர் எழுதி வைத்திருக்கும் டைரி மூலமாகவே அவர் அறிந்துகொண்டிருக்கிறார்.
அந்த விபத்துக்கு பின், பல கட்ட சிகிச்சைகள் அளித்து டேனியலின் உயிரை காப்பாறிவிட்டாலும் கூட அவரின் நினைவாற்றல் பழைய நிலைக்கு திரும்பவில்லை. இதன் காரணமாக அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. நண்பர்கள், உறவினர்கள், காதலி, குழந்தை என அனைத்தையும் மறந்துவிட்டு தனிமரமாக நிற்கிறார். டேனியல் தன் கையோடு வைத்திருக்கும் டைரியில் அவருடைய வாழ்க்கையை பற்றி விரிவாக எழுதி வைத்திருக்கிறார், அதில் எழுதியிருப்பது மட்டுமே அவருடைய வாழ்க்கை. அவர் எழுத மறந்த விஷயங்கள் அவர் வாழ்க்கையில் நடந்ததை அவரால் எப்போதுமே அறிய முடியாது.
இவருடைய முன்னாள் காதலியான கத்ரினாவிடம், தனக்கு நேர்ந்த விபத்து குறித்தும் தன்னுடைய நினைவாற்றல் குறித்தும் பேசிய டேனியல், உன்னை தொடர்ந்து மூன்று நாட்கள் பார்க்காமல், பேசாமல் இருந்தால் என்னால் உன்னை யாரென்றே அறிய முடியாது என தெரிவித்திருக்கிறார். மூன்று நாட்களுக்கு பின் கத்ரினாவை பார்ப்பதாக இருந்தால் அது தான் அவரை பொறுத்தவரையில் முதல் சந்திப்பாக இருக்கும்.
டேனியலுக்கும், கத்ரினாவுக்கும் சில ஆண்டுகளுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை வளர்வதை கூட அவர் மறந்து விடுகிறார். என்னால் என்னுடைய மகன் பிறந்ததை கூட நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை. இது தான் மிகவும் மோசமான நிலை என்றார். டேனியல் தன்னை போல மெமரி லாஸால் கஷ்டப்படுவோருக்கு உதவுவதை தனது வாழ்க்கையின் அடிப்படையாக மாற்றிக்கொண்டிருக்கிறார்.