காணாமல் போன சிறுமி 18 நாட்களுக்கு பின் மீட்பு
04 Nov,2021
சிட்னி:ஆஸ்திரேலியாவில், காணாமல் போன நான்கு வயது சிறுமி, 18 நாட்களில் உயிருடன் மீட்கப்பட்டதற்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எலி - ஜாக் தம்பதியின் மூத்த மகள் கிளியோ. புளோஹோல்ஸ் புறநகர் பகுதியில், ஒரு குடிலில் விடுமுறையை அனுபவித்துக் கொண்டிருந்த எலி - ஜாக் தம்பதி, ஒரு நாள் வெளியே சென்று விட்டு திரும்பியபோது, கிளியோவைக் காணாமல் அதிர்ச்சி அடைந்தனர்.அவர்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
நாட்கள் நகர்ந்தனவே தவிர கிளியோவைப் பற்றி ஒரு துப்பும் கிடைக்கவில்லை. இந்நிலையில், சிறுமியை பத்திரமாக மீட்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆஸி., அரசுக்கு, சமூக ஊடகங்களில் கோரிக்கைகள் குவிந்தன. இதையடுத்து, கிளியோ குறித்து துப்பு கொடுத்தால் 5.5 கோடி ரூபாய் பரிசு தரப்படும் என, அரசு அறிவித்தது. அத்துடன் போலீஸ், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர், சிறுமி காணாமல் போன வனப் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
நாட்கள் செல்லச் செல்ல, கிளியோ உயிருடன் மீட்கப்படுவார் என்ற நம்பிக்கை குறைந்தது. இந்நிலையில், கர்னர்வன் என்ற கடலோர கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில், போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு ஒரு சிறுமி இருந்தாள். போலீசாரால் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருந்த அச்சிறுமி, 'நான் தான் கிளியோ' என்றாள். இதையடுத்து, சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கிளியோ உயிருடன் மீட்கப்பட்டதைக் கேட்டு அவளது பெற்றோர் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். கர்னர்வன் கிராமத்தினர் வீதிகளில் குவிந்து மகிழ்ச்சியை கொண்டாடினர்.18 நாட்களுக்குப் பின், கிளியோ உயிருடன் மீட்கப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் பாராட்டு மழை குவிந்து வருகிறது. இதற்கிடையே கிளியோவை கடத்தியது தொடர்பாக ஒருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்துள்ளனர்.