அமெரிக்காவில் இந்திய மருந்து நிறுவன அதிகாரி சுட்டுக்கொலை
30 Oct,2021
அமெரிக்காவில் நியூஜெர்சி மாநிலத்தின் பிளைன்ஸ்போரோ நகரத்தில் வசித்துவந்த இந்தியர், ஸ்ரீரங்கா அரவப்பள்ளி (54). இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். மருந்து நிறுவனம் ஒன்றின் தலைமை செயல் அதிகாரியாக ஸ்ரீரங்கா பணிபுரிந்து வந்தார். சூதாட்டத்தில் ஆர்வமுள்ள ஸ்ரீரங்கா, பிலடெல்பியா நகருக்கு வெளியே உள்ள சூதாட்ட விடுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு விளையாடி, 10 ஆயிரம் டாலர் (ரூ.7.50 லட்சம்) பணத்தைக் குவித்தார். பின் செவ்வாய்க்கிழமை அதிகாலை வீட்டுக்கு காரில் கிளம்பினார்.
ஸ்ரீரங்கா அதிக பணம் வென்றதை பார்த்துக்கொண்டிருந்த ஒரு அமெரிக்க வாலிபர், அவரை தன்னுடைய காரில் பின்தொடர்ந்தார். ஸ்ரீரங்கா 80 கி.மீ. தூரம் பயணித்து தனது வீட்டை அடைந்ததும், அந்த வாலிபர் ஸ்ரீரங்காவை மிரட்டி அவரிடம் இருந்து பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றார். அப்போது நடந்த தகராறில் ஸ்ரீரங்காவை துப்பாக்கியால் வாலிபர் சுட்டுக் கொன்றுவிட்டார். அப்போது வீட்டுக்குள் ஸ்ரீரங்காவின் மனைவியும், மகளும் உறங்கிக்கொண்டிருந்தனர்.
மருந்து நிறுவன அதிகாரியை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடிய ஜெகாய் ரீட் ஜான் என்ற 27 வயது வாலிபரை போலீசார் கைது செய்தனர். பிளைன்ஸ்போரோ நகரில் பிரபலமானவராக விளங்கிவந்த இந்திய மருந்து நிறுவன அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டது, அப்பகுதி இந்தியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது