உத்தரகாண்டில் கனமழை- பனிச்சிகரத்தில் 5 சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு
21 Oct,2021
உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழையால் குமான் பிராந்தியம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தனர். அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
இந்நிலையில், பெகாஸ்வரில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பனிச்சிகரங்களில் சுற்றுலாப் பயணிகள் 65 பேர் சிக்கிக்கொண்டனர். பெகாஸ்வரில் இருந்து மீட்புக்குழுவினர் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே சுந்தர்துங்கா பனிச்சிகரத்தில் சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகளில் 5 பேர் உயிரிழந்ததாகவும், ஒருவரை காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திவாலி சிகரத்தில் 4 நாட்களாக தவித்த 22 சுற்றுலாப் பயணிகள் நேற்று மீட்கப்பட்டனர். மீதமுள்ள 10 பேரை மீட்கும் பணி இன்று நடைபெறுகிறது. பிதோராகர் மாவட்டம் தர்மா மற்றும் பியாஸ் பள்ளத்தாக்கில் சிக்கித்தவித்த 60க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ராணுவ ஹெலிகாக்டர்கள் மூலம் இன்று மீட்கப்பட்டனர். மேலும் பல்வேறு பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகளை பத்திரமாக மீட்கும் பணி நடைபெறுகிறது.