பூங்காவில் கண்டெடுக்கப்பட்ட அதிசய “மஞ்சள் வைரம்” - இதன் மதிப்பு தெரியுமா?
08 Oct,2021
அமெரிக்காவில் பொதுமக்களுக்காக திறந்திருக்கும் வைர சுரங்கம் உள்ள மாநிலம் ‘ஆர்கன்சாஸ்’ ஆகும்.
பூங்காவில் பயணி ஒருவர் நடைப்பயணத்தின் போது அதிஷ்டவசமாக ஒரு மஞ்சள் நிறமுள்ள வைரத்தை கண்டெடுத்திருக்கிறார்.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் ‘நோரீன் ரெட்பெர்க்’. இவர் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வார். இந்த நிலையில் அவர் வழக்கம் போல் ‘ஆர்கன்சாஸின் க்ரேட்டர் ஆஃப் டயமண்ட்ஸ் ஸ்டேட்’ பூங்காவில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே ஓரமாக பளபளக்கும் மஞ்சள் கல்லைக் கண்டார்.
என்னவாக இருக்கும் என்று அப்பெண்மணி கையில் அக்கல்லை எடுத்தார். அது ஒரு வைரக்கல் என்றும், அது அதிகவிலைக்கு விற்பனை செய்யலாம் என்றும் அவருக்கு தோன்றவில்லை. அவர் அந்த கல்லை பூங்காவைச் சேர்ந்த அதிகாரிகளிடம் கொடுத்தார். அதனை சோதித்த அதிகாரிகள் அது மஞ்சள் நிற வைரம் என்று கண்டுபிடித்தனர்.
அந்த கல் 4.38 காரட் அளவுடையது. இம்மஞ்சள் வைரம் அமெரிக்காவின் மதிப்பில் 20,000 டாலர் என்றும், இந்திய மதிப்பில் ரூ 14,94,021 மதிப்புடையது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி கூறிய அப்பெண்மணி, ‘அது ஒரு வைரம் என்று எனக்கு அப்போது தெரியாது, ஆனால் அது சுத்தமாகவும் பளபளப்பாகவும் இருந்தது, அதனால் நான் அதை எடுத்தேன். பிறகு அதனை அந்த பூங்காவை சேர்ந்த அதிகாரிகளிடம் கொடுத்தேன்’ என்றார்.
இதுகுறித்து பேசிய பூங்கா மேற்பார்வையாளர் காலேப் ஹோவெல், இந்த மஞ்சள் வைரம் ஒரு பேரிக்காய் வடிவத்தில், எலுமிச்சை மஞ்சள் நிறத்தில் இருப்பதாக கூறுகிறார். இதனை என்னிடம் நோரீன் ரெட்பெர்க் என்ற பெண்மணி கொடுத்தார், இதற்கு முன்பு கடந்த அக்டோபரில் 4.49 காரட் வைரத்தை ஒரு பார்வையாளர் கண்டுபிடித்திருக்கிறார் என்றும் அவர் தகவல் அளித்துள்ளார்.
அதே போல இந்த பூங்காவில் கிடந்த மிகப்பெரிய வைரங்களில் மற்றொன்று இருக்கிறது. அது 9.07 காரட் வைரம் ஆகும். இந்த மஞ்சள் வைரம் அதன் நிறத்தின் தீவிரத்தைப் பொறுத்து 20 ஆயிரம் டாலர் முதல் 30 ஆயிரம் டாலர் வரை சில்லறை விற்பனை செய்யப்படும். மஞ்சள் நிறத்தின் தெளிவான மற்றும் தீவிரமான நிறம் மிகவும் மதிப்புமிக்கதாக மாறும் என்றும் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த மஞ்சள் வைரம் அரியதாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் பொதுமக்களுக்காக திறந்திருக்கும் வைர சுரங்கம் உள்ள மாநிலம் ‘ஆர்கன்சாஸ்’ ஆகும். இங்கு வரும் மக்கள் வைரங்களை கண்டுபிடிப்பது ஒரு அரிய நிகழ்வாகும். அவ்வப்போது இங்கு வரும் மக்கள், சிறியது முதல் பெரிய வகை வரையிலான வைர கற்களை கண்டுபிடிக்கிறார்கள். இது அனைத்தும் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று பூங்காவின் அதிகாரி ஸ்டேசி ஹர்ஸ்ட் தெரிவித்துள்ளார்.