சுயஇன்பம் பழக்கத்தால் மரணத்தின் விளிம்புக்கு சென்று திரும்பிய நபர்
26 Jul,2021
..
ஜப்பானில் அடிக்கடி சுயஇன்பத்தில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு முளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு இறக்கும் நிலைக்கும் சென்றுவிட்டார். மருத்துவர்களின் உதவியால் தற்போது அந்த நபர் உயிர்பிழைத்துள்ளார்.
ஜப்பானை சேர்ந்த 51 வயது மதிக்கத்தக்க நபருக்கு ஒரேநாளில் பலமுறை சுயஇன்பம் செய்யும் பழக்கம் இருந்துள்ளது. அந்த பழக்கமே அவரது உடல்நிலையை மோசமான நிலைமைக்கு கொண்டு சென்றுள்ளது. ஜெர்னல் ஆஃப் ஸ்டோக் மற்றும் செரிப்ரோவேஸ்குலோர் நோய் குறித்த ஆய்வில் இந்த தகவலை ஜப்பான் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த தரவுகளின்படி, ஜப்பானை சேர்ந்த திருமணமாகாத 51 வயது நபருக்கு ஒரே நாளில் பலமுறை சுய இன்பம் காணும் பழக்கம் இருந்துள்ளது.
சமீபத்தில் அவர் சுயஇன்பம் செய்து முடித்தபின்னர் அவருக்கு ஒரு நிமிடம் தலைவலி ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து அவருக்கு வாந்தி மற்றும் பார்வை குறைபாடு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது. முதலில் அவர் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்தப்பிரச்னையானது நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது. அந்த நபரால் இந்த பழக்கத்தில் இருந்து விடுபடமுடியவில்லை. இந்தப்பழக்கத்தால் தனக்கு இந்தப்பிரச்னை ஏற்படுகிறது என்பதை மட்டும் அவரால் உணரமுடிந்தது. இதுகுறித்து நண்பர்களிடம் கலந்தாலோசிக்க அவருக்கு தயக்கமாக இருந்துள்ளது. இதனையடுத்து நாகோயா சிட்டியில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார். தனக்கு ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இதனையடுத்து அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்ததில் மூளையில் ரத்தகசிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. அதாவது இவர் சுயஇன்பம் செய்து முடித்த பின்னர் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக இவருக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. ரத்தம் வெளியேறுதல் காரணமாக இவருக்கு உயிரைப்பறிக்கும் பக்கவாதம் ஏற்படுவதற்கான ஆபத்தும் இருந்துள்ளது. அந்த நபர் இருமும் போதும், கழிவறை செல்லும் போது மூளையில் ரத்தக்கசிவு ஏற்படுவது மருத்துவர்கள் மேற்கொண்ட சோதனையில் தெரியவந்தது.
இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டது. இரண்டு வார சிகிச்சைக்கும் பின்னர் அந்த நபர் முழு உடல் நலன் பெற்று வீடு திரும்பியுள்ளார். இதனை அவர் சாதாரணமாக கருதி விட்டிருந்தால் அவரது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.