பிரிட்டன் கப்பல் மீது குண்டு வீசுவோம்: ரஷ்யா
26 Jun,2021
கருங்கடல் பகுதியிலுள்ள பிரிட்டனின் கடற்படைக் கப்பல்கள் மீது குண்டு வீசுவோம் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு நாடுகளின் எல்லையாக இருக்கும் கருங்கடலை ரஷ்யா தனது அதிகார மையமாக பார்த்துவருகிறது. துருக்கி, பல்கெரியா, உக்ரைன் என்று பல நாடுகளின் எல்லையில் கருங்கடல் உள்ளது. அதன் மற்றொரு எல்லையில் ரஷ்யா உள்ளது. இந்த இடத்தில் ஆதிக்கத்தை நிலைநாட்ட விரும்பும் ரஷ்யாவுக்கு போட்டியாக துருக்கி, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.
உக்ரைனுக்குச் சொந்தமான பகுதியாக இருந்துவந்த கிரிமியா தீபகற்பத்தை 2014-ம் ஆண்டு ரஷ்யா தன்னுடைய பகுதியாக இணைத்துக்கொண்டது. ஆனால், கிரிமா தீபகற்பம் ரஷ்யாவின் பகுதி என்பதை மேற்குலக நாடுகள் ஒப்புக்கொள்ளவில்லை. அந்த நாடுகள் கிரிமாவை உக்ரைனின் பகுதி என்று கூறிவருகின்றன.
இந்தநிலையில், உக்ரைனின் கடற்படையை வலுப்படுத்துவதற்கு பிரிட்டனுடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் உக்ரைனின் ஓடேசா துறைமுகத்துக்கு கடந்த வாரம் பிரிட்டன் போர்க்கப்பல் சென்று நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அதனையடுத்து, ரஷ்யாவுக்குச் சொந்தமான பகுதியில் 3 கி.மீ தூரத்துக்கு பிரிட்டனின் போர்க்கப்பல் துணிகரமாக பயணித்துள்ளது என்று ரஷ்யா கண்டனம் தெரிவித்தது.
அதன்தொடர்ச்சியாக, ‘ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவிலுள்ள பிரிட்டன் தூதர் டிபோரா ப்ரோநெர்டுக்கு ரஷ்யா சம்மன் கொடுத்தது. கருங்கடல் பகுதியில் பிரிட்டன் மேற்கொண்ட நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
இதுதொடர்பாக விளக்கமளித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ‘பிரிட்டன் போர்க்கப்பல், உக்ரைனியன் துறைமுகத்திலிருந்து ஜார்ஜியன் துறைமுகத்துக்கு சென்றது. இந்த நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தின்படியே நடைபெற்றது. அதுமொத்தமும் உக்ரேனுக்குச் சொந்தமான கடற்பகுதி’ என்று தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, ரஷ்யாவின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜெய் ரைப்கோவ், ‘சர்வதேச சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கக் கோருவோம். பொதுத் தளத்தில் இந்த விவகாரத்தைக் கொண்டுவருவோம். அதில், பலன் கிடைக்கவில்லையென்றால் பிரிட்டன் கப்பற்படை மீது குண்டுவீசுவோம்’ என்று தெரிவித்தார். இது உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.