பிரபல ரவுடி பட்டப்பகலில் 6 பேர் கொண்ட கும்பலால் ஓடஓட வெட்டி கொலை.!
04 May,2021
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், 24 வயதான ரவுடி பட்டப்பகலில் 6 பேர் கொண்ட கும்பலால் ஓடஓட வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுனைச் சேர்ந்தவர் 24 வயதான யோகேஷ். இவர் மீது கொலை, அடிதடி போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. வெள்ளிக்கிழமை பிற்பகலில், யோகேஷ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனங்களில் அவரது பின்னால் வந்த 6 பேர் கும்பல் அரிவாளால் வெட்டியுள்ளனர்.
அவர்களிடம் இருந்து தப்பித்துச் செல்ல யோகேஷ் ஓடியுள்ளார்; ஆனால் விடாமல் துரத்திய கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியது. ரத்த வெள்ளத்தில் விழுந்த யோகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த பெற்றோர், உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவத்தனர்
ஆரணி போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் துக்க வீட்டில் நடந்த மோதல் தான் கொலைக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. ஆரணியைச் சேர்ந்த கோபி என்பவர் யோகேஷின் நண்பராக இருந்துள்ளார். சிறிய கருத்து வேறுபாட்டில் இருவரும் பிரிந்து விட்டனர். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு துக்க வீட்டிற்கு இருவரும் சென்றுள்ளனர்.
அங்கு நண்பர்களுடன் சேர்ந்து யோகேஷ் நடனம் ஆடிய போது, அவரது நீண்ட நகம் கோபியின் கைமீது பட்டு ரத்தம் வந்துள்ளது. ஆத்திரமடைந்த கோபி, யோகேஷுடன் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளார். அந்தத் தகராறின் தொடர்ச்சியாகத் தான் தனது மகன் கொலை செய்யப்பட்டதாக யோகேஷின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்தக் கொலை வழக்கில், 21 வயதான கோபி, 29 வயதான சங்கர், 22 வயதான சூர்யா, 21 வயதான அஜித் உள்ளி்ட்ட 6 பேரைப் போலீசார் தேடி வருகின்றனர்.