வைரஸ் பரவலையும் தடுக்கிறது தடுப்பூசி: ஆய்வில் தகவல்
29 Apr,2021
தடுப்பூசி போட்டுக் கொள்வதால், கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவது தடுக்கப்படுவதுடன், ஒருவருக்கு தொற்று ஏற்பட்டாலும் மற்றவர்களுக்கு பரப்புவதும் குறைவதாக, ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின், இங்கிலாந்து பொது சுகாதார அமைப்பு, சமீபத்தில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:ஏற்கனவே நடத்தப்பட்ட ஆய்வுகளில், தடுப்பூசியின் முதல், 'டோஸ்' எடுத்துக் கொண்ட, நான்கு வாரத்துக்குள், 65 சதவீதம் பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது என்பது தெரியவந்துள்ளது.
அதன்படி, இந்தாண்டு, மார்ச் மாத இறுதி வரையிலான காலத்தில், 60 வயதுக்கு மேற்பட்ட, 10 ஆயிரத்து, 400 உயிர் பலி தவிர்க்கப்பட்டுள்ளது.தற்போது நடத்தப்பட்டுள்ள ஆய்வின்படி, ஒருவர் தடுப்பூசி எடுத்துக் கொண்ட பின், அவருக்கு தொற்று ஏற்பட்டாலும், அவர் மூலம், குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வைரஸ் பரவுவது, 50 சதவீதம் வரை குறைவது தெரியவந்துள்ளது.
நாடு முழுதும், 24 ஆயிரம் வீடுகளில் உள்ள, 57 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், இது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம், தடுப்பூசி, தொற்று ஏற்படுவதை தடுப்பதுடன், மற்றவர்களுக்கு பரப்புவதையும் தடுக்கிறது என்பது தெரியவந்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது