கொரோனா பெரும்பாலும் இப்படித்தான் பரவும்... வலுவான ஆதாரத்தை கண்டறிந்த ஆய்வாளர்கள்
16 Apr,2021
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. கொரோனா பரவும் விதம், வைரசின் தன்மை, பாதிப்புகள், உருமாற்றம் அடைந்த வைரஸ் என பல்வேறு தகவல்களை ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. வைரல் பாதிப்பு உள்ளவர்கள் தும்மும்போதோ, இருமும்போதோ வெளிப்படும் நீர்த்திவலைகள் மூலம் வைரஸ் காற்றில் பரவி மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என பல ஆய்வுகள் கூறுகின்றன. அதனால் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது அவசியம் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
இந்நிலையில், கொரோனா வைரசானது பெரும்பாலும் காற்றின் மூலம் பரவுவதற்கு வலுவான சான்றுகள் கிடைத்துள்ளதாக லான்செட் என்ற மருத்துவ இதழில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா பரிசோதனை
வைரஸ் முக்கியமாக காற்றின்மூலம் பரவும் என எச்சரிக்கை செய்து நடவடிகை எடுக்காமல், பொது சுகாதார நடவடிக்கைகள் தோல்வி அடைந்திருப்பதால், வைரஸ் பரவ வழிவகுத்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், கொரோனாவின் பரிமாற்ற விகிதங்கள் திறந்தவெளியை விட மூடப்பட்ட பகுதிகளில் மிக அதிகமாக உள்ளன, உள்ளரங்குகளில் வென்டிலேட்டர்கள் மூலம் காற்றை வெளியேற்றுவதால் வைரஸ் பரவல் பெரிதும் குறைக்கப்படுகிறது என்றும் கூறி உள்ளனர்.
அதேசமயம், எச்சில் துப்புவதால் பெரிய நீர்த்துளிகள் வழியாக வைரஸ் எளிதில் பரவுகிறது என்பதற்கு எந்த ஆதாரத்தையும் ஆய்வாளர்கள் கண்டறியவில்லை.