பார்லி. வளாகத்தில் பலாத்காரம் : ஆஸி.யில் அரங்கேறிய அவலம்
24 Mar,2021
பார்லிமென்ட் வளாகத்துக்குள்ளேயே பாலியல் உடலுறவு சம்பவங்களும் பலாத்கார சம்பவங்களும் நடந்துள்ளது ஆஸ்திரேலியாவை உலுக்கியுள்ளது. அதைவிட அந்த சம்பவங்களை படம்பிடித்து மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளும் கேவலமும் நடந்துள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தனியார் 'டிவி' சமீபத்தில் ஒரு செய்தியை வெளியிட்டது. பார்லிமென்ட் வளாகத்தில் பணியாற்றும் ஆண் ஊழியர்கள் சிலர் சமூக வலைதளத்தில் தனியாக ஒரு குழுவை உருவாக்கியுள்ளனர். அதில் ஆபாச படங்கள் 'வீடியோ'க்கள் இடம்பெற்றுள்ளன.
அந்த அனைத்து காட்சிகளும் பார்லிமென்ட் வளாகத்திலேயே எடுக்கப்பட்டவை. பெண் ஊழியர்களை மிரட்டியும் அதிகாரத்தை பயன்படுத்தியும் ஆண் ஊழியர்கள் பாலியல் உடலுறவில் ஈடுபட்ட மற்றும் பாலியல் பலாத்காரம் செய்த காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன.
ஒரு முன்னாள் பெண் ஊழியர் பணியில் இருந்தபோது பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் கொடுத்தார். ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.அதைத் தொடர்ந்து இந்த 'செக்ஸ் ஊழல்' வெளியானது. தற்போது பல்வேறு பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை தெரிவிக்கத் துவங்கியுள்ளனர்.'இந்த சம்பவங்கள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன; வெட்கக்கேடானது' என பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியிருந்தார்.
இந்நிலையில் ''அரசியலில் மற்றும் அதிகாரத்தில் பெண்களுக்கு அதிக அளவு ஒதுக்கீடு வழங்கப்படும். அதுவே இதுபோன்ற அத்துமீறல்களை தடுக்க உதவும்'' என ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார்.