2 சகோதரிகளின் ஆசையை நிறைவேற்றிய துபாய் போலீசார்
20 Mar,2021
துபாய் நகரில் சம்மா மற்றும் மரியம் என்ற சகோதரிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் போலீசாரின் சிறப்பான சேவைகளை பாராட்டி அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் கருத்துகளை தெரிவித்து வந்தனர். மேலும் போலீசார் பல்வேறு அதிநவீன கார்களை வைத்திருப்பதை செய்தித்தாள் உள்ளிட்ட ஊடகங்கள் மூலம் பார்த்து தெரிந்து வைத்திருந்தனர். இந்தநிலையில், ஒருநாள் அந்த காரில் பயணம் செய்ய வேண்டும் என்ற தங்களது விருப்பத்தையும் போலீசாருக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்தனர். அவர்களது விருப்பத்தையறிந்து போலீசார் 2 சிறுமிகளுக்கும் இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், போலீசின் ரோந்து, சுற்றுலா தளங்கள் செல்ல பயன்படுத்தப்படும் ‘சூப்பர் காரை’ அவர்களது வீட்டின் முன்பு நிறுத்தி சென்றனர். இந்த காரானது மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது. இதை பார்த்த அந்த சிறுமிகளும், அவர்களது குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடினர்.
இதனைத் தொடர்ந்து போலீசார் பெற்றோரின் அனுமதியின் பேரில், 2 சிறுமிகளையும் அந்த சூப்பர் காரில் அமர வைத்து பயணம் செய்தனர். இருவரும் அந்த காரில் நகரின் முக்கிய சுற்றுலா தளங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
பயணத்தின் போது அந்த சூப்பர் காரின் வசதிகள் குறித்து சிறுமிகளுக்கு போலீசார் விவரித்தனர்.
இந்த சகோதரிகளில் ஒருவரான சம்மா, கல்வியில் சிறப்பாக செயல்பட்டு வருவதற்காக ஷேம் ஹம்தான் பின் ராஷித் அல் மக்தூம் விருதைப் பெற்றுள்ளார். மேலும் மற்றொரு சகோதரி மரியம் சிறந்த மாணவிக்கான 3-ம் ஆண்டு அமீரக விருதை பெற்றார். இருவரும் கல்வியில் சிறப்பாக இருந்து வருவதற்கு போலீசார் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தனர். தொடர்ந்து கல்வியில் சிறந்து விளங்க வாழ்த்தி அவர்களது இல்லத்தில் விட்டு விட்டு சென்றனர்.
போலீசார் சூப்பர் காரில் அழைத்துச் சென்று மகிழ்ச்சிப்படுத்தியதற்காக 2 சிறுமிகளும், அவரது பெற்றோரும் நன்றி தெரிவித்தனர்.