மன்னர்களின் காலம் எப்படி இருந்திருக்கும் என்பதைக் கற்பனைசெய்து பார்ப்பதில், நம் அனைவருக்குமே அலாதி ப்ரியம்தான்.
மன்னர்கள் அரசாண்ட அரண்மனைகளை, திரைப்படங்களில் மட்டுமே பார்த்திருப்பீர்கள். அவை பெரும்பாலும் கற்பனையில் உருவாக்கப்பட்ட செட்களாகவே இருக்கும்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, அரசர்கள் ராஜ்ஜியம் செய்த உண்மையான அரண்மனைகள் நேரில் காணக் கிடைப்பது பெரும்பாக்கியம்!
தஞ்சாவூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பழைய பேருந்துநிலையத்திலிருந்து கீழராஜவீதிக்கு அப்படியே காலாற நடந்து சென்றாலே, தஞ்சாவூர் பழங்கால அரண்மனைக்குச் சென்றுவிடலாம்.
_அரண்மனை_23164_16122சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த அரண்மனையானது, அவர்களுக்குப் பிறகு தஞ்சையை ஆட்சிசெய்த மராட்டிய மன்னர்களால் மேலும் விரிவுபடுத்தப்பட்டது.
பல நூறு ஆண்டுகளைக் கடந்திருந்தாலும் இந்த அரண்மனை, காலத்தால் அழிக்க முடியாத வரலாற்றுத் தலமாகக் காட்சியளிக்கிறது.
மன்னர்களின் அரசவை, அவர்கள் பயன்படுத்திய போர்க்கருவிகள், உடைகள், ஆபரணங்கள், சிறைக்கூடம், சுரங்கப்பாதை, மாடமாளிகை, பழங்கால ஓவியங்கள் என இன்னும் ஏராளம் உள்ளன.
அரண்மனை வளாகம், மொத்தம் 110 ஏக்கர்! இந்த அரண்மனை, தர்பார் மண்டபம், மணிமண்டபம், ஆயுதச் சேமிப்பு மாளிகை, நீதிமன்றம் என நான்கு முதன்மைக் கட்டடங்களைக் கொண்டுள்ளது.
மணிமண்டபத்தில் மொத்தம் 11 மாடிகள் இருந்துள்ளன. இந்த 11 மாடிகளில் இப்போது 8 மாடிகள் மட்டுமே இருக்கின்றன. ஒவ்வொரு மாடியிலும் நான்கு புறச் சுவர்களின் மேல் வளைந்த சாளரங்கள் உள்ளன.
அதனால் இதை `தொள்ளக்காது மண்டபம்’ எனப் பொதுமக்கள் அழைக்கின்றனர். இந்த மண்டபம் கண்காணிப்பு மண்டபமாகப் பயன்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
தஞ்சையைத் தலைமையாகக்கொண்ட மன்னர்கள் அமர்ந்து ஆட்சி செலுத்திய மண்டபம், தர்பார் மண்டபம். பல வண்ணங்களில் அமைந்த ஓவியங்கள், தர்பார் மண்டபத்தை அலங்கரிக்கின்றன.
இந்த மண்டபத்துக்கு முன் பெரிய மைதானம் உள்ளது. ஆயுதச் சேமிப்பு மாளிகை, கோபுர வடிவில் காணப்படுகிறது. கோபுரத்துக்குச் செல்லும் படிக்கட்டுகள் மிகவும் சிக்கலான வளைவு, நெளிவுகளைக்கொண்டவை.
நீதிமன்றக் கட்டடத்தை, `ஜார்ஜவா மாளிகை’, `சதர் மாளிகை’ என்றும் அழைக்கின்றனர். சதர் என்ற பாரசீகச் சொல்லுக்கு நீதிமன்றம் என்ற பொருள். இது ஏழு மாடிகள்கொண்டதாக இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது ஐந்து மாடிகள் மட்டுமே உள்ளன.
இந்த அரண்மனை செவ்வப்ப நாயக்கரால் தொடங்கப்பட்டு ரகுநாத நாயக்கர் மற்றும் விஜயராகவா நாயக்கர்களால் கட்டி முடிக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த அரண்மனை, கி.பி.1674-லிருந்து 1855 வரை மராட்டிய அரசின் கைவசம் இருந்தது. மாராட்டியர் காலத்தில் மராட்டிய கட்டடக்கலை நுணுக்கத்துடன் அரண்மனையின் சில பகுதிகள் கட்டப்பட்டன.
பிறகு ஆங்கிலேயர் காலத்தில் பிரிட்டிஷ், பிரான்ஸ், ராஜஸ்தான் கட்டடக் கலையின் தொழில்நுட்பங்கள் பல, தஞ்சை அரண்மனையின் வடிவமைப்பில் சேர்க்கப்பட்டன.
இந்த அரண்மனை தற்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அரண்மனை வளாகத்தில் உள்ள சரஸ்வதி மஹால் நூலகமும் சுற்றுலாப் பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று.
மன்னர்கால மருத்துவ முறைகள், கட்டடக்கலை, சிற்பக்கலை உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய மிகவும் பழைமையான நூல்கள் மட்டுமல்லாமல், ஏராளமான ஓலைச்சுவடிகளும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
சுற்றுலா என்பது நம்மைப் பரவசப்படுத்துவதாக மட்டுமல்லாமல், பழங்காலத்துக்கு நம்மை அழைத்துச் செல்வது என்பது கூடுதல் சிறப்பல்லவா!