தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரித்தானியர்களுக்கு எல்லைகளைத் திறப்பதாக சைப்ரஸ் அறிவிப்பு!
06 Mar,2021
எனினும், பிரித்தானியா அரசாங்கத்தின் பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள் மே முதலாம் திகதி முதல் தடைகள் இல்லாமல் அங்கு பயணிக்கலாம் என சைப்ரஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதனிடையே 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த கோடையில் கடலோர விடுதிகளின் விலை 35 சதவீதம் உயர்ந்துள்ளது என்று ஒரு பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது.
இதுகுறித்து சைப்ரஸின் துணை சுற்றுலா அமைச்சர் சவ்வாஸ் பெர்டியோஸ் கூறுகையில், ‘ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் (ஈ.எம்.ஏ) ஒப்புதல் அளித்த தடுப்பூசிகள் வழங்கப்பட்ட பிரித்தானியர்களுக்கு, எதிர்மறையான சோதனை அல்லது தனிமைப்படுத்தலின் தேவை இல்லாமல் நுழையும் உரிமையை நாடு அனுமதிக்கும்.
சுற்றுலாப் பயணிகள் பயணத்திற்கு குறைந்தது ஏழு நாட்களுக்கு முன்னதாகவே இரண்டாவது டோஸ் செலுத்தி இருக்க வேண்டும்’ என கூறினார்.
ஏப்ரல் முதலாம் திகதி முதல் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் நுழைய சைப்ரஸ் ஏற்கனவே இதேபோன்ற ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.