ஜேர்மனிய நாடாளுமன்றக் கட்டடத் தரவுகள் ரஷ்யாவிடம்- உளவாளி கண்டறியப்பட்டார்!
25 Feb,2021
ஜேர்மனின் பன்டெஸ்ரக் (Bundestag) நாடாளுமன்றக் கட்டடத்தின் தரைத் திட்டங்களை ரஷ்ய உளவுத் துறையினருக்கு அனுப்பிய ஒருவரை அந்நாட்டு சட்ட வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர்.
அவர், பன்டெஸ்ரக்கின் கட்டத்தின் மின்சார உபகரணங்களைப் பராமரிப்பதற்காக அனுமதியளிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தில் பணியாற்றியதுடன் தனது பணியின்போது குறித்த கட்டடத்தின் திட்டங்களுடன் கூடிய கோப்புகளைப் பெற்றிருந்தார் என அரச வழக்கறிஞர் அலுவலகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகள் ரஷ்யாவிற்கும் ஜேர்மனிக்கும் இடையிலான உறவை மேலும் மோசமாக்கக்கூடும் என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
சட்ட வல்லுனர்களின் கூற்றுப்படி, சந்தேகநபர் 2017ஆம் ஆண்டில் பன்டெஸ்ரக் கட்டத்தின் மாடித் திட்டங்களை ரஷ்ய உளவுத்துறைக்கு அனுப்ப முடிவுசெய்துள்ளார்.
அத்துடன், ரஷ்யாவின் ஜி.ஆர்.யூ. இராணுவப் புலனாய்வு அமைப்பில் அதிகாரியாக இருந்த பேர்ளினில் உள்ள ரஷ்யத் தூதரகத்தின் அதிகாரிக்கு சந்தேகநபரால் தரவு சேமிப்புச் சாதனமொன்று அனுப்பப்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த பெப்ரவரி 12ஆம் திகதி பேர்ளின் நீதிமன்றத்தில் இந்தக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இதுகுறித்து வழக்கு விசாரணைக்குச் செல்லலாமா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ரஷ்ய பாதுகாப்புச் சேவைகள் ஜேர்மனியின் சட்டமன்றத்தில் உளவு பார்த்ததாகக் கூறப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவல்ல எனவும் அங்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர், ரஷ்யாவால் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.