காருக்குள் உணவை விட்டு செல்ல கூடாது. ஏன்
25 Feb,2021
காரின் கேபினுக்குள் ஏன் உணவு பொருட்களை ஒருபோதும் விட்டு செல்ல கூடாது? என்பதற்கான முக்கிய காரணங்களை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம். இன்றைய அதிநவீன உலகில் நாம் வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது, அனைத்திற்கும் முழுமையாக தயாராகி இருக்க வேண்டிய தேவை காணப்படுகிறது. உதாரணத்திற்கு மார்க்கெட்டிற்கோ,
அலுவலகத்திற்கோ அல்லது நண்பர்களின் வீடுகளுக்கோ செல்லும்போது பயணத்தின்போது தேவைப்படும் அனைத்து பொருட்களும் நம்மிடம் இருப்பதை உறுதி செய்து கொள்வது அவசியமாகிறது. இதன்படி காரில் தொலை தூர பயணங்களை மேற்கொள்ளும்போது, ஹோட்டல்களில் சாப்பிடுவதற்கு பதிலாக, வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை கொண்டு செல்வதை பலர் வழக்கமாக வைத்துள்ளனர். வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிடுவது என்பது சிறப்பான ஒரு முடிவுதான். ஆனால் அந்த உணவை காரில் விட்டு செல்வது என்பது நல்ல நடவடிக்கை கிடையாது. ஆம், காரில் உணவை விட்டு செல்வதால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். ஆனால் ஒரு சிலர் தெரிந்தோ அல்லது தெரியாமலோ காரில் உணவை விட்டு செல்கின்றனர்.
இது எவ்வளவு அபாயகரமானது? என்பது பலருக்கும் தெரிவதில்லை. எனவே காரில் ஏன் உணவு பொருட்களை விட்டு செல்லக்கூடாது? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம். உணவு பொருட்கள் கெட்டு போகாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால், பாக்டீரியாக்கள் வளர்வதற்கான சூழலை நாம் தவிர்க்க வேண்டும். 4 டிகிரி செல்சியஸ் முதல் 60 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்ப நிலைகளில் பாக்டீரியாக்கள் மிகவும் வேகமாக வளரும். கோடை காலங்களின்போது காருடைய இன்டீரியரின் வெப்ப நிலை மிக எளிதாக 60 டிகிரி செல்சியஸை அடையும். பொதுவாக காருக்கு வெளியே இருக்கும் வெப்ப நிலையை காட்டிலும்,
காருக்கு உள்ளே அதிக வெப்பம் நிலவும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். பாக்டீரியாக்களுக்கு உகந்த வெதுவெதுப்பான நிலை, ஈரப்பதம் மற்றும் ஊட்ட சத்துக்களை தெரிந்தோ, தெரியாமலோ நீங்கள் வழங்கினால், அவை நிச்சயமாக வளரும். கண்ணுக்கு புலப்படாத ஒரு சிறிய பாக்டீரியா வெறும் 12 மணி நேரத்தில் 17 மில்லியன் சந்ததிகளை உருவாக்கும். அதாவது அரை நாளில் 1.70 கோடியாக உருவெடுக்கும். விரைவில் கெட்டு போகக்கூடிய உணவுகள் குளிரூட்டப்படாத நிலையில் இருந்தால், 32 டிகிரி செல்சியஸ் அளவிற்கு கீழான வெப்ப நிலையில் வெறும் 2 மணி நேரங்களுக்கு மட்டுமே பாதுகாப்பாக இருக்கும். அதுவே வெப்ப நிலை 32 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் மேலாக இருந்தால் வெறும்
1 மணி நேரத்திற்கு மட்டும்தான் பாதுகாப்பாக இருக்கும். காரில் உணவு பொருட்களை விட்டு செல்லக்கூடாது என்பதற்கு இதுவே முக்கியமான காரணம். பாக்டீரியாக்கள் பரவுவதால் ஏற்படக்கூடிய பின் விளைவு ஃபுட் பாய்சனாக (Food Poisoning) இருக்கலாம். பாக்டீரியாக்கள் உணவில் இருந்து பரவ தொடங்கும். அந்த உணவை சாப்பிடும் நபர்களுக்கு ஃபுட் பாய்சன் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே காரின் கேபினில் உண்ணக்கூடிய பொருட்களை ஒருபோதும் விட்டு செல்லாதீர்கள். நீங்கள் காரின் கேபினில் இருந்து வெளியே வரும்போது இதனை உறுதி செய்து கொள்வது நல்லது. காரில் உணவு பொருட்களை விட்டு செல்லக்கூடாது என்பதற்கு மற்றொரு காரணம் எலிகள்.
கார்களுக்கு மிகவும் ஆபத்தான விலங்குகளில் எலிகள்தான் முக்கியமானது. எலிகளை கார்களுக்கு எதிரிகள் என்றும் சொல்லலாம். காரில் கிடக்கும் உணவு பொருட்கள் எலிகளை அழையா விருந்தாளிகளாக வரவேற்கும் என்பதை பலர் உணர்வதில்லை. எலிகள் கார்களுக்குள் நுழைந்து விட்டால், வயர்கள், இருக்கைகள், ஏசி, இன்ஜின் என பல்வேறு பாகங்களை சேதப்படுத்தி விடும். அவற்றை சரி செய்ய நீங்கள் பெரும் தொகையை செலவழிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். கார்களுக்குள் எலிகள் நுழைவதற்கு ஏராளமான வழிகள் உள்ளன. எனவே எலிகளிடம் இருந்து உங்கள் காரை பாதுகாக்க வேண்டுமென்றால், கேபினில் உணவை விட்டு செல்லாதீர்கள்.