இத்தாலியின் 20 மண்டலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தடை மார்ச் 27 வரை நீட்டிப்பு
23 Feb,2021
இத்தாலி நாட்டின் பிரதமராக கடந்த 13ந்தேதியில் இருந்து மரியோ திராகி பொறுப்பு வகித்து வருகிறார். அந்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு நாட்டின் 20 மண்டலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு வருகிற மார்ச் 27ந்தேதி வரை தடையை நீட்டித்து அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதேபோன்று நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திப்பதற்கான கட்டுப்பாடுகளையும் அரசு நீட்டித்து உத்தரவிட்டு உள்ளது. இதன்படி, ஒரு நபரின் வீட்டுக்கு 2 பேருக்கு கூடுதலானோர் செல்ல முடியாது. அப்படி செல்வோரும் ஒரு நாளுக்கு மேல் தங்க முடியாது.
சிவப்பு மண்டலங்களில் இருப்போர் வேறு ஒருவரை சந்திக்க செல்வதற்கே அனுமதி இல்லை. எனினும், பணி, சுகாதாரம் அல்லது அவசர காரணங்களுக்காக பயணம் செய்வதற்கு அல்லது ஒருவர் தனது வீட்டுக்கு திரும்ப வேண்டிய அவசியத்தில் உள்ளவர் ஆகியோருக்கு இந்த மண்டல போக்குவரத்து தடையானது பொருந்திடாது என தெரிவித்து உள்ளது. இத்தாலி நாட்டிற்குள்ளேயே சுற்றுலா செய்வதற்கான தடையும் தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.