சீன ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் பரவவில்லை - உறுதி செய்த உலக சுகாதார நிறுவனம்
09 Feb,2021
சீனாவின் ஊஹான் மாகணத்தில் 2019-ம் ஆண்டின் டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்துவருகிறது. இதுவரையில், 1.7 கோடி பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், சீனாவின் வைரஸ் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் காரணமாகதான் இந்த வைரஸ் உருவானது என்றும் சீனா திட்டமிட்டு வைரஸை உருவாக்கியுள்ளது என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தக் குற்றச்சாட்டை கூறிவந்தார். அவர், கொரோனா வைரஸை சீன வைரஸ் என்றே குறிப்பிட்டுவந்தார்.
அதனையடுத்து, சீனாவில் கொரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது என்பது குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார நிறுவனம் முடிவு செய்தது.
இந்தநிலையில், ஆய்வுக்குப் பிறகு கொரோனா பரவல் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய உலக சுகாதார நிறுவனம், ‘கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்திலிருந்து பரவியிருப்பதற்கு வாய்ப்பில்லை. இது விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவியிருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. எங்களுடைய தொடக்கநிலை ஆய்வுகள் ஏதேனும் விலங்குகளிடமிருந்து உருவாகியிருக்க வாய்ப்பு அதிகமுள்ளதை உணர்த்துகிறது.
இன்னமும் நீண்ட ஆய்வுகள் தேவைப்படுகின்றன. இருப்பினும், ஆய்வகங்களிலிருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கும் என்று கூறப்படும் கூற்றை ஒப்புக்கொள்ளும் வகையில் எந்த தரவுகளும் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.