டென்மார்க்கில் வெளிநாட்டு அமைச்சை முற்றுகையிட்ட தமிழர்கள்
18 Jan,2021
கொரோனா இடர்பாடுகளுக்கு மத்தியிலும் டென்மார்க் வாழ் தமிழ் மக்கள், டென்மார்க் காவல்துறை மற்றும் வெளிநாட்டமைச்சின் சிறப்பு அனுமதியுடன், ஈழத்தமிழின அழிப்பிற்கான கவனயீர்ப்பு போராட்டத்தை உணர்வுபூர்வமாக மேற்கொண்டனர்.
டென்மார்க் தலைநகரில் இந்த கவனயீர்ப்பு வாகன பேரணி இன்று 12.30 மணிக்கு ஒழுங்கமைக்கப்பட்ட இடத்திலிருந்து ஆரம்பித்து நூற்றுக்கும் மேற்பட்ட வாகன பேரணி டென்மார்க் நாடாளுமன்ற முன்றலை வந்தடைந்தது.
பின்பு டென்மார்க் நாடாளுமன்ற முன்றலில் கூடிய டென்மார்க் வாழ் தமிழீழ மக்கள், ஈழவிடுதலைப் போரிலே வீரச்சாவடைந்த மாவீரர்கள் மற்றும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் கொல்லப்பட்ட பொதுமக்களையும் நினைவு கூர்ந்து அகவணக்கம் செலுத்தினர்.
கவனயீர்ப்பு ஊர்வலம், தேசியத்தலைவரின் படங்கள், தேசியக்கொடி மற்றும் தமிழினப்படுகொலையை பறைசாற்றும் பதாகைகளையும் தாங்கிய வண்ணம் உணர்வெழுச்சியுடன் “COVID 19” சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்த வண்ணம் நாடாளுமன்றத்தில் இருந்து புறப்பட்டு டென்மார்க் வெளிநாட்டமைச்சை வந்தடைந்தது.
அங்கு இறுதி நிகழ்வுகள் இடம்பெற்று தமிழினப்படுகொலைக்கான ஆதாரங்கள் அடங்கிய மகஜர் ஒன்றும் டென்மார்க் வெளிநாட்டமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டது.
வெளிநாட்டு அமைச்சருடனான கலந்துரையாடலின் போது தமிழ்தேசிய கட்சிகள் ,புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தமிழ் சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றிணைவு - ஸ்ரீலங்கா அரசாங்கத்தினை நெருக்கடியான நிலையில் கொண்டுவந்திருப்பதை டென்மார்க் அரசு உணர்வதாகவும் ,அதனை உள்வாங்கி தங்களின் எதிர்கால நடவடிக்கைகள் ஈழத்தமிழர் நோக்கி அமையும் என அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமை மீறல் ஆணையத்தில் நடைபெறவிருக்கும் கூட்டத்தொடரில் ஈழத் தமிழர்களின் விவகாரம் விவாதிக்கப்படவுள்ள நிலையில், அதற்கு வலுச்சேர்க்கும் வகையில், இக்கவனயீர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.