கேப் கனாவெரல்:நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டங்களுக்காக, புதிய வழிகாட்டுதல்களை, நாசா நேற்று வெளியிட்டது.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, 2024ம் ஆண்டு, ஒரு பெண் உட்பட, இரண்டு விண்வெளி வீரர்களை, நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு, 'ஆர்ட்டெமிஸ்' என பெயர் வைக்கப்பட்டுஉள்ளது.இந்நிலையில், இந்த திட்டத்திற்கான புதிய வழிகாட்டுதல்கள் தொகுப்பை, நாசா நேற்று வெளியிட்டது. 1967ம் ஆண்டின் விண்வெளி ஒப்பந்தத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆர்ட்டெமிஸ் ஒப்பந்தத்தில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, இத்தாலி, ஜப்பான், லக்சம்பர்க், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுஉள்ளதாவது:விண்வெளி திட்டங்களில் ரகசியம் இருக்கக் கூடாது. விண்ணுக்கு அனுப்பப்படும் அனைத்து பொருட்களும் அடையாளம் காணப்பட்டு, பதிவு செய்யப்படவேண்டும்.விண்வெளி அமைப்புகள் உலகளாவியதாக இருக்க வேண்டும். அறிவியல் தரவுகள் பகிரப்பட வேண்டும். வரலாற்று தளங்கள் பாதுகாக்கப்படவேண்டும் விண்வெளி குப்பை கழிவுகள் சரியாக அகற்றப்பட வேண்டும்.
விண்வெளி வாகனங்கள், இதர விண்கலங்களுக்கு அருகில் சென்று ஆய்வு செய்யக்கூடாது. இவற்றை மீறும் நாடுகள், வெளியேற வேண்டும்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இது குறித்து, நாசா நிர்வாக அதிகாரி ஜிம் பிரிடென்ஸ்டைன், ''நிலவிற்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் முயற்சியில், மேலும் பல நாடுகள் இணையும். இது, சர்வதேச நாடுகள் ஒன்றிணையும் பிரமாண்ட திட்டமாக அமையும் என நம்புகிறேன்,'' என்றார்.
மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் உள்ள பைகோனர் ஏவுதளத்தில் இருந்து, நேற்று ஒரு ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.அதன் மூலம், நாசாவின் கேட் ரூபின்ஸ், ரஷ்யாவின் செர்ஜி ரிஜிகோவ் மற்றும் செர்ஜி குட்ஸ்வெர்ச்கோவ் உள்ளிட்ட மூன்று விண்வெளி வீரர்கள், சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.வெறும் மூன்று மணி நேரத்தில் விண்வெளி மையத்தின் சுற்றுவட்டப் பாதையை அடையக்கூடிய வகையில், அதிவேக சுழற்சி முறை பயன்படுத்தப்படுகிறது. இந்த முறை பயன்படுத்தப்படுவது, இதுவே முதன் முறையாகும்.