துருக்கி மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கலாம்: ஐரோப்பிய ஒன்றியம்
02 Oct,2020
எரிசக்தி வளங்கள் மற்றும் கடல் எல்லைகள் தொடர்பாக கிரேக்கத்துடன் தொடர்ச்சியாக மோதலில் ஈடுபட்டுவரும் துருக்கி மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கலாம் என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது.
பிரஸ்ஸல்ஸில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் கூட்டத்தின் போதே, ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இந்த கருத்தினை வெளியிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘கிழக்கு மத்தியதரைக் கடலில் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளில் இருந்து அங்காரா விலக வேண்டும்.
துருக்கியுடனான ஒரு நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான உறவை ஐரோப்பிய ஒன்றியம் விரும்புகிறது. இது அங்காராவின் நலனுக்காகவும் இருக்கும். ஆனால், ஆத்திரமூட்டல்கள் மற்றும் அழுத்தங்கள் நிறுத்தப்பட்டால் மட்டுமே அது செயற்படும்
எனவே துருக்கி இனி ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளில் இருந்து விலகும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்’ என கூறினார்.
கிரேக்க தீவான கஸ்டெல்லோரிசோவிற்கு துருக்கிய கடற்படைக் கப்பலான ‘ஓருக் ரெய்ஸ்’ என்ற ஆய்வுக் கப்பலை துருக்கி அனுப்பியபோது இருநாடுகளுக்கும் இடையே மோதல் அதிகரித்தது.
பிரான்சும் ஜேர்மனியும் பதற்றத்தைத் தணிக்க மத்தியஸ்தம் செய்ய முயன்று வருகின்றன. ஆனாலும் பதற்றங்கள் நீடிக்கின்றன.
இதனிடையே, முன்னதாக கிழக்கு மத்தியதரைக் கடலில் கிரேக்கம் மற்றும் சைப்ரஸுடனான அதிகரித்துவரும் பதற்றங்களைக் குறைப்பதில் முன்னேற்றம் காணப்படாவிட்டால், துருக்கிக்கு புதிய பொருளாதாரத் தடைகள் மற்றும் கடுமையான பொருளாதார நடவடிக்கைகள் விதிக்கப்படுமென ஐரோப்பிய ஒன்றியம் அச்சுறுத்தியிருந்தமை நினைவுக்கூறத்தக்கது.