நோர்வேயில் மூவர் மீது கத்திக்குத்து: ஒருவர் கைது!
16 Jul,2020
நோர்வேயில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக, 31 வயதான ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் ஒஸ்லோவின் தெற்கே சர்ப்ஸ்போர்க் நகரில் நேற்று (புதன்கிழழமை) இரவு இந்த கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில், 50வயது மதிக்கதக்க பெண்னொருவர் உயிரிழந்ததோடு, மேலும் மற்றொரு பெண் பலத்த காயமடைந்துள்ளதாகவும், இன்னொருவர் லேசான காயங்களுக்கும் உள்ளாகியுள்ளார்.
பொலிஸார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தாக்குதல் நடத்திய ஆண், இரண்டு பெண்களுடன் உறவு கொண்டிருந்தார் எனவும், ஆனால் கொல்லப்பட்ட பெண் அவர்களில் ஒருவர் அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குற்றம் சாட்டப்பட்டவரின் மன ஆரோக்கியம் தாக்குதல்களுக்கு ஒரு காரணியா என்று விசாரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த தாக்குதல்தாரி முன்னதாக தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார் என கூறப்பட்டபோதும், பின்னர் அது பொலிஸாரின் ஊடகவியலாளர் சந்திப்பில் மறுக்கப்பட்டது.