போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தென்காசி ஆட்டோ டிரைவர் மரணம்
29 Jun,2020
சாத்தான்குளம் தந்தை மகன் சிறை மரணத்தைத் தொடர்ந்து தென்காசியில் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆட்டோ டிரைவர் உயிரிழந்துள்ளார்.
இந்த மரணம் போலீஸ் சித்ரவதையால் நிகழ்ந்தது என்று அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
ஊரடங்கு விதியை மீறி கூடுதல் நேரம் கடை நடத்தியதாக கைது செய்யப்பட்ட ஜெயராஜ்- பென்னிக்ஸ் என்ற தந்தை மகன் இருவரும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சித்ரவதைக்கு உள்ளான பிறகு சிறையில் அடைக்கப்பட்டு இறந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.
உயர்நீதிமன்ற அனுமதி பெற்றபின், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்போவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இந்நிலையில் தென்காசி ஆட்டோ டிரைவர் மரணம் தொடர்பாக, அவரது குடும்பத்தினர் அளித்த புகாரை ஏற்று, போலீஸ் உதவி ஆய்வாளர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே நேரம் குமரேசனின் இறப்பு லாக் அப் மரணம் என தற்போது உறுதிப்படுத்தமுடியாது என தென்காசி மாவட்டகாவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தென்காசி வீரகேரளம்புதூரில் மே 10ம் தேதி ஒரு வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் குமரேசன், போலீஸ் காவலில் சித்ரவதை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும், வெளியில் வந்தவுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர் மருத்துவமனையில் சனிக்கிழமை (ஜுன் 27-ம் தேதி) இறந்துவிட்டதாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
சாத்தான்குளத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இறந்த, ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு ஆறுதல் கூறும் பாதிரியார் ஒருவர்.
மே மாதம் போலீஸ் விசாரணைக்கு சென்றுவந்த பிறகு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், ஜூன் 10ம் தேதி உடல் நலம் குன்றியதால், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டதாகவும், அங்கேதான் அவர் உயிரிழந்தார் என்றும் குமரேசனின் தந்தை நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த புகாரில், காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் காவலர் குமார் உள்ளிட்டோர் தாக்கியதால் மகன் குமரேசன் உடல் நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார் என தெரிவித்துள்ளார்.
அவர் பல முறை முயற்சி செய்தபோதும் காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்யவில்லை என்றும் பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
போலீஸ் காவலில் நடந்த சித்ரவதையால் இறந்ததாக கூறப்படும் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் சவப்பெட்டிகள் போராட்டக்காரர்களுக்கு மத்தியில் கொண்டு செல்லப்படுகிறது.
குமரேசனின் மரணம் குறித்து பதிவான முதல் தகவல் அறிக்கையில் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் குமார் ஆகியோர் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தாலும், இது கொலை வழக்காக பதிவு செய்யப்படவில்லை என்றும் குமரேசனின் மரணம், சந்தேக அடிப்படையில் இயற்கைக்கு மாறான மரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நவநீதகிருஷ்ணனின் உறவினர்கள் பலரும் காவல்துறையினரின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக்கூறி போராட்டம் நடத்தியதாகவும், காவல் துறை உயர் அதிகாரிகளின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்னர் வழக்கு பதிவானது என்றும் அவர் தெரிவித்தார்.
சாத்தான்குளம் தந்தை – மகன் கோவில்பட்டி சிறையில் மரணம்: கதறும் குடும்பம்
பத்திரிகையாளர்களிடம் பேசிய நவநீதகிருஷ்ணன், ”எனது மகனை போலீசார் அழைத்து சென்று கடுமையாக தாக்கியதில் அவர் இறந்துவிட்டார்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் சந்தேக மரணம் என ஒரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து எங்களை ஏமாற்றி விட்டார்கள். இதனை வன்மையாக கண்டிக்கிறேன்,” என தெரிவித்தார்.
தற்போது சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை-மகன் சிறைக் காவலில் இறந்த சம்பவத்தில், சிபிஐ விசாரணை நடத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததை அடுத்து, தென்காசி வழக்கிலும் விசாரணை துரிதப்படுத்தவேண்டும் என குமரேசன் குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங்கிடம் பேசியபோது, குமரேசன் தந்தை அளித்துள்ள புகாரின் பேரில்தான் வழக்கு பதிவாகியுள்ளது என்றும், அவரை ஏமாற்றவில்லை என்றும் தெரிவித்தார்.
”நவநீதகிருஷ்ணன் மற்றும் ஊர் பொது மக்கள் முன்னியில்தான் வழக்கு பதிவு செய்தோம்.
குமரேசனின் உடற்கூறு பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை நேர்மையாக நடத்துவோம் என்பதை அவர் குடும்பத்தாரிடம் உறுதிப்படுத்தியுள்ளோம்.
இது லாக் அப் மரணம் என தற்போது சொல்ல முடியாது. நவநீதகிருஷ்ணன் தெரிவித்த புகாரை மையமாக கொண்டு விசாரணை செய்து வருகிறோம்,” எனத் தெரிவித்தார்.