கொரோனா அச்சுறுத்தல்: கனடாவில் வெளிநாட்டவர்கள் குடியேற்றம் பாதியாக குறையும் - வெளியான முக்கிய தகவல்!
30 May,2020
கனடாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வரும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை தொடர்பிலான ஆய்வின் முக்கிய முடிவுகள் வெளியாகியுள்ளது. உலகளவில் வெளிநாட்டவர்களுக்கு அதிக அளவில் குடியுரிமை வழங்கும் நாடுகளில் ஒன்றாக கனடா இருந்து வருகிறது. இதனால் இலங்கை இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேரு நாடுகளை சேர்ந்தவர்கள், கல்வி வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக அதிக அளவில் கனடா செல்கின்றனர்.
இதனை அடுத்து வெளிநாட்டினரை வரவேற்கும் வகையில் அதிக அளவிலான சலுகைகளை கனடா வழங்கி வருகிறது. இதில் கடந்த ஆண்டு மட்டும் 3,41,000 வெளிநாட்டவர்களுக்கு கனடா நிரந்தர குடியுரிமை வழங்கியுள்ளது. இதனிடையே இந்த ஆண்டு மட்டும் 3,70,000 பேருக்கு குடியுரிமை வழங்க கனடா திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு கனடா வரும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை பாதியாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கனடாவின் ராயல் வங்கி மேற்கொண்டுள்ள ஆய்வின் படி இந்த ஆண்டு 1,70,000 வெளிநாட்டவர்களே கனடா வர வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது. இதுகுறித்து தெரிவித்துள்ள இந்த ஆய்வின் ஆசிரியர் ஆண்ட்ரூ அகோப்சோவிச், கொரோனா அச்சுறுத்தலால் இந்த ஆண்டு வெளிநாட்டவர்கள் குடியேற்றம் கடுமையாக பாதிக்கும் எனவும் அடுத்த ஆண்டின் நிலை நோய் பாதிப்பை பொருத்து கணிக்கப்படும் என தெரிவித்தார். கனடாவில் பொருளாதாரம் வெளிநாடுகளில் இருந்து குடியேறும் மக்களை சார்ந்து இருப்பதாகவும் மக்களின் வருகை குறைந்தால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையலாம் எனவும் கூறியுள்ளார்.