ஒரு கொலையை மறைக்க ஒன்பது கொலை செய்த நபர் : தெலுங்கானாவில் சம்பவம்!
26 May,2020
தெலுங்கானாவில் புலம் பெயர் தொழிலாளர்கள் ஒன்பது பேரை கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலங்கானா மாநிலம் வாரங்கல் புறநகரில் உள்ள கீசுகொண்டா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் விவசாயக் கிணறு ஒன்றில் இருந்து ஒன்பது சடலங்கள் மீட்கப்பட்டன.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலங்களின் உடலில் எந்த காயமும் இல்லை எனவும், இதனால் அவர்கள் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக கீசுகொண்டா பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். விசாரணையின் முடிவில் பிகாரைச் சேர்ந்த சஞ்சய் குமார் என்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் ரஃபீகா என்ற பெண்ணை சஞ்சய் குமார் கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த கொலை சம்பவத்தை மறைப்பதற்காக தொடர்ச்சியாக அவர் 9 கொலைகளை செய்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த ஒன்பது பேருக்கும் உணவில் தூக்கமாத்திரை கலந்து கொடுத்து கொலை செய்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.