மணமகனை கரம்பிடிக்க 80.கி.மீ தூரம் தனியாக நடந்து சென்ற 20 வயது மணமகள்
24 May,2020
மணமகள் ஒருவர் 80 கிலோமீற்றர் தூரம் தனியாக நடந்து சென்று மணமகனை கரம்பிடித்த சம்பவம் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூரைச் சேர்ந்த பெண் கோல்தி எனும் 20 வயது யுவதியே இவ்வாறு 80 கிலோமீற்றர் தூரம் தனியாக நடந்து சென்று திருமண பந்தத்தில் இணைந்தார்.
உத்தரபிதேசத்தின் கன்னோஜ் நகரைச் சேர்ந்த வீரேந்திர குமார் எனும் 24 வயது இளைஞரக்கும் மே 4ம் திகதி திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால், கொரோனா பரவல் காரணமாக உத்தரபிதேசத்தில ஊரடங்கு அமுலில் உள்ளதால்இருவரின் திருமணமும் தள்ளிப்போனது. இதனிடையே மணப்பெண் மற்றும் மணமகனின் குடும்பத்தினர் தொலைபேசி மூலமாகவே பேசி வந்துள்ளனர்.
ஊரடங்கு தொடர்ந்ததால் திருமணம் தொடர்ந்து தள்ளிப்போகவே ஒரு கட்டத்தில் மணப்பெண் கோல்தி நடந்தே மணமகனின் வீட்டுக்குச் செல்வதற்குத் தீர்மானித்தார்.
கடந்த புதன்கிழமை, கலை சல்வார் கமீஸ் அணிந்துகொண்டு தனியாக கான்பூரிலிருந்து நடக்கத் தொடங்கினார் கோல்தி. 80 கி.மீ. நடந்து கன்னோஜ் மாவட்டத்தின் வைசாபூர் கிராமத்திலுள்ள மணமகன் வீரேந்திரகுமார் வீட்டை அவர் அடைந்தார்.
திடீரென்று மணப்பெண் வந்து சேர்ந்ததை கண்டு மகிழ்ச்சியடைந்தனர். கோல்தியை அவரின் பெற்றோரின் வீட்டுக்கு திருப்பி அனுப்பிவைக்கவும், திருமணத்தை மற்றொரு திகதியில் நடத்துவதற்கும் மணமகனின் குடும்பத்தினர் விருப்பம் தெரிவித்தனர். ஆனால், அதை ஏற்றுக்கொள்ள மறுத்த மணமகள் கோல்;தி, உடனடியாக திருமணத்தை நடத்த வலியுறுத்தினராம்.
இதையடுத்து மணமகன் வீட்டார் திருமணத்தை அருகிலுள்ள கோவிலில் எளிமையாக நடத்தி முடித்தனர்.
திருமணத்திற்கு ஒரு சில உறவினர்களே வந்திருந்தனர். மணமக்கள் உட்பட அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்தனர். மணப்பெண் துணிச்சலுடன் தனியாக 80 கிலோமீற்றர் நடந்து சென்று மணமகனை கைபிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.