காற்றில், கொரோனா வைரஸ் மூலக்கூறு அணு உள்ளதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில், விஞ்ஞானி, கி லன் தலைமையிலான குழு, கடந்த, பிப்.,-மார்ச் மாதங்களில், கொரோனா வைரஸ் தோன்றிய, வூஹான் நகரில், இரு அரசு மருத்துவமனைகள் உட்பட, 31 இடங்களில் காற்றில் உள்ள கிருமிகள் குறித்து ஆய்வு செய்துள்ளது. இந்த ஆய்வறிக்கையை, 'ஜர்னல் நேச்சர்' இதழ் வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உள்ள மருத்துவமனைகளின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் மேற்கொண்ட ஆய்வில், காற்றில், கொரோனா வைரஸ் மூலக்கூறு அணு உள்ளது தெரியவந்தது. ஆனால், அவைதான் கொரோனா வைரஸ் பரவ காரணமா என்பதை உறுதிப்படுத்த, மேலும் ஆய்வு செய்ய வேண்டும்.
காற்றோட்டமுள்ள நோயாளிகளின் அறைகளில், இந்த மூலக்கூறு அணுவின் அடர்த்தி மிகக் குறைவாக காணப்பட்டது. அதேசமயம், கழிப்பறை போன்ற வெளிக்காற்று வசதியற்ற இடங்களில், அடர்த்தி அதிகமாக இருந்தது.மருத்துவமனைக்குள்ளும், வெளியிலும், அதிகமானோர் நடமாட்டம் காரணமாக, மூலக்கூறு அணு அதிகம் காணப்பட்டது.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பாதுகாப்பு ஆடைகளை அகற்றி, வேறு உடைகளை அணியும் அறைகளில், மூலக்கூறு அணுவின் அடர்த்தி அதிகமாக காணப்பட்டது.பாதுகாப்பு ஆடைகளில் ஒட்டியிருக்கும் அணு உதிர்ந்து, மீண்டும் காற்றில் கலந்ததுதான் இதற்கு காரணம் என, கருதப்படுகிறது.
கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட, துாய்மை நடவடிக்கைகளுக்குப் பின், காற்றில் உள்ள கொரோனா வைரஸ் மூலக்கூறு அணு வெகுவாக குறைந்து இருந்தது. குறிப்பாக, பொது இடங்கள், வணிக வளாகங்கள், குடியிருப்பு பகுதிகள் ஆகியவற்றில், கொரோனா மூலக்கூறு அணு குறைவாகவே இருந்தது. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது