கொரோனா அறிகுறியுடன் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி கற்பழித்து கொலை – தனி வார்டில் நடந்த கொடூரம்
15 Apr,2020
பீகார் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி தனிவார்டில் கற்பழித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளார்.
பீகார் மாநிலம் கயா மாவட்டத்தை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் தனது கணவருடன் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தங்கி கூலி வேலை செய்து வந்தார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 27-ந் தேதி இருவரும் சொந்த ஊர் திரும்பினர். இந்தநிலையில் கர்ப்பிணிக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டதால் உறவினர்கள் அவரை அங்குள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அப்போது அவருக்கு கொரோனா அறிகுறிகள் தெரிந்ததால் உடனே அவரை ஆஸ்பத்திரியில் உள்ள தனி வார்டில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்தது. இதையடுத்து கடந்த 3-ந் தேதி ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ் சார்ஜ் ஆனார்.
வீடு திரும்பிய 3-வது நாளில் அந்த பெண்ணுக்கு ரத்தப்போக்கு அதிகமாகி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது ஆஸ்பத்திரியின் தனி வார்டில் மருத்துவமனை ஊழியர் ஒருவர் கர்ப்பிணியை தொடர்ந்து 2 நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதனாலேயே ரத்தப்போக்கு அதிகமாகி இறந்துவிட்டதாகவும் பெண்ணின் மாமியார் புகார் கூறினார்.
இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி மருத்துவமனை ஊழியரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் தொடர்பாக மாநில மகளிர் ஆணைய அதிகாரிகளும் விசாரணையில் இறங்கி இருக்கிறார்கள்.
கர்ப்பிணி கற்பழித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு கயா மாவட்ட நிர்வாகத்திடம் மகளிர் ஆணையம் கோரிக்கை வைத்து இருக்கிறது